Showing posts with label 10th Tamil. Show all posts
Showing posts with label 10th Tamil. Show all posts

TN 10th Public Exam: Top 27 Important 2 Marks Questions in Tamil

 As the public exams approach, smart preparation is the key to scoring high marks. Tamil is a scoring subject if you focus on the right areas. To help you maximize your score, we have compiled the most expected and frequently asked 2-mark questions for your upcoming Tamil Public Examination.

For your convenience, you can also download or refer to the complete study material from the file named 10th Tamil - Important 2 Marks Questions for Public Exams.pdf.

Below is the list of highly important 2-mark questions you must study before stepping into the exam hall:





மிக மிக முக்கியமான இரண்டு மதிப்பெண் வினாக்கள் (Top Important 2-Mark Questions)

  1. 'பலகை' என்பதை தொடர்மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  2. "கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க: உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.

  3. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  4. கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தி தொடரை விரித்து எழுதுக.

  5. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

  6. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

  7. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

  8. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

  9. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

  10. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

  11. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

  12. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

  13. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

  14. "கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார் - அயற்கூற்றாக எழுதுக.

  15. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' - கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

  16. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.

  17. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

  18. பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும் - பின்வருவனவற்றுள் கூறான ஆயதம் எது என்று செந்நாபோதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

  19. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

  20. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கச் சான்று தருக.

  21. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  22. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

  23. குறிப்பு வரைக: அவையம்.

  24. சங்க இலக்கியத்தில் அரசின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

  25. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

  26. பழங்களை விடவும் நசுங்கிப்போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

  27. திருக்குறள்: இயல் 3, 5 இருக்கக்கூடிய பத்துக் குறள்கள்.

Study Tips for Maximum Marks

  • Write Clearly: Ensure your handwriting is legible and maintain adequate spacing between words.

  • Check Spelling: Tamil grammar and spelling mistakes (எழுத்துப்பிழை) can reduce your marks. Practice writing the answers down.

  • Review Grammar Rules: Questions on grammar like பகுபத உறுப்பிலக்கணம் and உம்மைத்தொகை require precise answers. Don't skip them!

Make sure you refer to your official textbook to write precise and perfect answers for all these questions. Bookmark this page, share it with your classmates, and study hard!

All the best for your Tamil Public Exam!

Tamil Poem Comprehension Questions and Answers (TN Board)

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ்சிலம்பே ! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) பாரதியார்
  • ஆ) பாரதிதாசன்
  • இ) முடியரசன்
  • ஈ) பெருஞ்சித்திரனார் ✓ Correct
2. இப்பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர் யாது?
  • அ) மலரும் மாலையும்
  • ஆ) பாஞ்சாலி சபதம்
  • இ) கனிச்சாறு ✓ Correct
  • ஈ) கொடி முல்லை
3. 'தென்னன் மகள்' என்பதன் பொருள் யாது?
  • அ) சேரன் மகள்
  • ஆ) சோழன் மகள்
  • இ) பல்லவன் மகள்
  • ஈ) பாண்டியன் மகள் ✓ Correct
4. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை குறிப்பிடுக.
  • அ) தென்னன், இன்னறும் ✓ Correct
  • ஆ) மன்னுஞ், மணிமேகலை
  • இ) முன்னும், முடிதாழ
  • ஈ) தென்னன், திருக்குறளின்
மாற்றம் எனது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்! தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
1. இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
  • அ) வாணிதாசன்
  • ஆ) கண்ணதாசன் ✓ Correct
  • இ) வண்ணதாசன்
  • ஈ) முடியரசன்
2. இப்பாடலின் தலைப்பு யாது?
  • அ) இயேசு காவியம்
  • ஆ) சேரமான் காதலி
  • இ) தைப்பாவை
  • ஈ) காலக்கணிதம் ✓ Correct
3. மானிடத்துவம் என்று எதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
  • அ) வளர்ச்சி
  • ஆ) ஏற்றத்தாழ்வு
  • இ) புகழ்
  • ஈ) மாற்றம் ✓ Correct
4. பாடலில் அமைந்துள்ள அடி மோனைச் சொற்களை எழுதுக.
  • அ) மாற்றம், மாறும் ✓ Correct
  • ஆ) மானிடம், மகத்துவம்
  • இ) எவ்வெவை, ஏகுமென்
  • ஈ) மாறுவர், மாறும்
மேகங்கள் ரொம்ப அற்புதமானவை தண்ணீரும் இல்லாமல் தன்னுயிரும் போகாமல் வான் வெளியில் மிதந்து செல்லும் போது மேகங்கள் மிகவும் மென்மையானவை.
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்ற கவிதைத் தலைப்பு
  • அ) சித்தாளு
  • ஆ) தேம்பாவணி
  • இ) அக்கறை
  • ஈ) மேகம் ✓ Correct
2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) வீரமாமுனிவர்
  • ஆ) பாரதியார்
  • இ) நாகூர்ரூமி ✓ Correct
  • ஈ) கல்யாண்ஜி
3. இப்பாடலின் அடிமோனைச் சொற்கள்
  • அ) தண்ணீரும், தன்னுயிரும் ✓ Correct
  • ஆ) வான்வெளி, மிதந்து
  • இ) மேகங்கள், தண்ணீரும்
  • ஈ) மிதந்து, மேகங்கள்
4. தண்ணீரும் தன்னுயிரும் - இலக்கணக்குறிப்பு
  • அ) உம்மைத்தொகை
  • ஆ) எண்ணும்மை ✓ Correct
  • இ) உவமைத்தொகை
  • ஈ) பண்புத்தொகை
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) கீரந்தையார்
  • ஆ) பரஞ்சோதி முனிவர்
  • இ) மோசிகீரனார்
  • ஈ) அதிவீரராம பாண்டியர் ✓ Correct
2. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
  • அ) கலித்தொகை
  • ஆ) நீதிவெண்பா
  • இ) பெரியபுராணம்
  • ஈ) காசிக்காண்டம் ✓ Correct
3. 'முகமன்' - சொல்லின் பொருள்
  • அ) விருந்தோம்பல் சொல் ✓ Correct
  • ஆ) கடுஞ்சொல்
  • இ) பழிச்சொல்
  • ஈ) தீயசொல்
4. இப்பாடலில் பயின்றுவரும் அடியெதுகைகளை எழுதுக.
  • அ) இனிது, இருத்தல், இவ்வொன்பான்
  • ஆ) விருந்து, வியத்தல், உறைத்தல், இருத்தல்
  • இ) மகிழ்வன, மற்று, முகமன், போமெனில்
  • ஈ) விருந்து, திருந்து, பொருந்து ✓ Correct
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
  • அ) நளவெண்பா
  • ஆ) முத்தொள்ளாயிரம் ✓ Correct
  • இ) ஏலாதி
  • ஈ) இன்னிலை
2. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
  • அ) உவமையணி
  • ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
  • இ) வஞ்சப்புகழ்ச்சி அணி
  • ஈ) தற்குறிப்பேற்ற அணி ✓ Correct
3. அள்ளல் என்பதன் பொருள்
  • அ) இசை
  • ஆ) சேறு ✓ Correct
  • இ) அஞ்சுதல்
  • ஈ) கூவுதல்
4. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
  • அ) அள்ளல் - அரக்காம்பல்
  • ஆ) அள்ளல் - வெள்ளம் ✓ Correct
  • இ) நச்சிலை - கோக்கோதை
  • ஈ) கைச்சிறகால் - கவ்வை
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்.
1. 'பெரும்பாண்' என்பதன் பொருள்
  • அ) புலவர்
  • ஆ) பாணர் ✓ Correct
  • இ) அமைச்சர்
  • ஈ) அந்தணர்
2. பாடலில் இடம்பெறும் அடிஎதுகைகள்
  • அ) பழுதுஇல், வழுவின்றி ✓ Correct
  • ஆ) வழுவின்றி, வழித்திறம்
  • இ) குழலினும், குரல்முதல்
  • ஈ) அரும்பெறல், பெரும்பாண்
3. 'வழு' என்பதன் பொருள்
  • அ) குற்றம் ✓ Correct
  • ஆ) சரி
  • இ) பொய்
  • ஈ) ஏமாற்றுதல்
4. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) திருத்தக்க தேவர்
  • ஆ) சீத்தலைச் சாத்தனார்
  • இ) கம்பர்
  • ஈ) இளங்கோவடிகள் ✓ Correct
விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாட எரிந்தன நுதிநச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல் நோகப் பிரிந்தன புள்ளின் கானில் பெரிதழுது இரங்கித் தேம்பச் சரிந்தன அசும்பில் செல்லும் தடவிலா தனித்தேன் அந்தோ!
1. இப்பாடல் இடம்பெற்ற நூல்
  • அ) இரட்சணிய யாத்திரிகம்
  • ஆ) பெத்லகேம் குறவஞ்சி
  • இ) தேம்பாவணி ✓ Correct
  • ஈ) சீறாப்புராணம்
2. இப்பாடலில் இடம்பெறும் அடியெதுகைகள்
  • அ) விரிந்தன, எரிந்தன, பிரிந்தன, சரிந்தன ✓ Correct
  • ஆ) விரிந்தன, வீயென
  • இ) பிரிந்தன, புண்போல்
  • ஈ) பிரிந்தன, புள்ளின்
3. "அசும்பு" என்பதன் பொருள்
  • அ) நிலம் ✓ Correct
  • ஆ) வானம்
  • இ) கடல்
  • ஈ) மேகம்
4. "கொம்பு" என்பதன் பொருள்
  • அ) கிளை ✓ Correct
  • ஆ) கொடி
  • இ) தண்டு
  • ஈ) வேர்
செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்.......
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
  • அ) கலித்தொகை
  • ஆ) பெரியபுராணம்
  • இ) பரிபாடல் ✓ Correct
  • ஈ) முல்லைப்பாட்டு
2. 'செந்தீ' என்பதன் இலக்கணக் குறிப்பு
  • அ) பண்புத் தொகை ✓ Correct
  • ஆ) உவமைத் தொகை
  • இ) உம்மைத் தொகை
  • ஈ) வேற்றுமைத் தொகை
3. 'தண்பெயல்' என்பதன் பொருள்
  • அ) இனிய ஓசை
  • ஆ) வறண்ட வயல்
  • இ) குளிர்ந்த மழை ✓ Correct
  • ஈ) தணிந்த குடை
4. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) ஓதலாந்தையார்
  • ஆ) அம்மூவனார்
  • இ) கபிலர்
  • ஈ) கீரந்தையார் ✓ Correct
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
1. 'ஊழ் ஊழ்' என்பதன் இலக்கணக்குறிப்பு
  • அ) இரட்டைக்கிளவி
  • ஆ) பண்புத்தொகை
  • இ) அடுக்குத்தொடர் ✓ Correct
  • ஈ) வினைத்தொகை
2. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) ஓதலாந்தையார்
  • ஆ) அம்மூவனார்
  • இ) கபிலர்
  • ஈ) கீரந்தையார் ✓ Correct
3. பாடலில் உணர்த்தப்படும் கருத்து
  • அ) தத்துவக்கருத்து
  • ஆ) அறிவியல் செய்தி ✓ Correct
  • இ) நிலையாமை
  • ஈ) அரசியல் அறம்
4. விசும்பு, இசை, ஊழி - பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
  • அ) காற்று, ஓசை, கடல்
  • ஆ) மேகம், இடி, ஆழம்
  • இ) வானம், பேரொலி, யுகம் ✓ Correct
  • ஈ) வானம், காற்று, கலம்

10th Tamil Puyalile Oru Thoni Neduvina Study Guide | TN Board

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் எளிதாகப் படித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில், கடினமான வரிகளை நீக்கி, முக்கிய வார்த்தைகள் (Key words) மற்றும் தலைப்புகளை உள்ளடக்கி எளிமைப்படுத்தப்பட்ட விடை இதோ:

நெடுவினா: 'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • மங்கலான இருட்டு
  • இடிமுழக்கம், மழை
  • மீண்டும் இடி, மழை, காற்று
  • எங்கும் வெள்ளம், இருட்டு
  • சூரிய வெளிச்சம்
  • பாண்டியனின் மலைப்பு
  • கரையை நோக்கி
  • முடிவுரை

முன்னுரை:

'புயலிலே ஒரு தோணி' என்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம். இதன் ஆசிரியர் ப.சிங்காரம். இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த சூழலில், மலேசியா, இந்தோனேசியப் பகுதிகளில் நடப்பதாக அமைந்த கற்பனைப் படைப்பே இப்புதினம். இதன் 'கடற்கூத்து' பகுதியைக் காண்போம்.

மங்கலான இருட்டு:

வெயில் இமை நேரத்தில் மறைந்து கும்மிருட்டு சூழ்ந்தது. புழுக்கம் அதிகரித்தது. அலைகள் எண்ணெய் பூசியது போல் மொழுமொழுவென (ஒலிக்குறிப்பு) நெளிந்தன. காற்றே இல்லாமல் ஒரே இறுக்கமாக இருந்தது.

இடிமுழக்கம், மழை:

கிடுகிடுக்கும் இடியுடன் மின்னல் வானைப் பிளந்தது. வானம் உடைந்து கொட்டுகொட்டென்று (அடுக்குத்தொடர்) மழை கொட்டியது. சூறாவளிக்காற்றும் மழையும் சேர்ந்து ஆடிக் குதித்தன.

மீண்டும் இடி, மழை, காற்று:

தொங்கான் (கப்பல்) தள்ளாடியது. மலை போன்ற அலைகள் கப்பலைத் தாக்கின. வான், கடல், காற்று, மழை ஆகிய நான்கும் சேர்ந்து கப்பலை நொறுநொறுவென (அடுக்குத்தொடர்) நொறுக்கும்படி கடல் வெறிக் கூத்தாடியது.

எங்கும் வெள்ளம், இருட்டு:

உடலெங்கும் வெள்ளம். ஈர உடை உடலை ரம்பமாய் அறுத்தது. கப்பல் மூழ்கியும் தாவியும் நீந்தியது. எங்கும் இருட்டிருட்டு, கும்மிருட்டு, குருட்டிருட்டு (அடுக்குத்தொடர்). உடம்பில் சிலுசிலுப்பான மரமரப்பு ஏற்பட்டது.

சூரிய வெளிச்சம்:

லேசான சூரிய வெளிச்சம் தெரிந்ததும், மாலுமிகள் கப்பலில் இருந்த நீரை இறைத்து வெளியே ஊற்றினர். மரத்தை வெட்டி, கப்பலின் ஓட்டையை அடைத்து ஆப்பு அடித்தனர்.

பாண்டியனின் மலைப்பு:

புயல் எவ்வளவு நேரம் நீடித்தது என்று பாண்டியனுக்குத் தெரியவில்லை. புயலின் போது மாலுமிகளால் கடலில் வீசப்பட்ட பெட்டிகளும் மூட்டைகளும் கப்பலோடு மிதந்து வந்தன.

கரையை நோக்கி:

இனிமேல் பயமில்லை, இரண்டு நாளில் கரையை அடையலாம் என நம்பினர். மறுநாள் சூரியன் உதித்தது; கடல் அலைகள் இயல்பாக வீசின. கப்பல் சீராக மிதந்து சென்றது.

முடிவுரை:

புயலில் சிக்கிய கப்பலின் போராட்டம், அழகான வருணனைகள், அடுக்குத் தொடர்கள் மற்றும் ஒலிக்குறிப்புச் சொற்களால் இக்கதையில் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு (தேர்வில் அதிக மதிப்பெண் பெற):

விடைத்தாளினைத் திருத்தும் ஆசிரியர்கள் 'மொழுமொழுவென', 'கொட்டுகொட்டென்று', 'நொறுநொறுவென', 'இருட்டிருட்டு' போன்ற முக்கிய வார்த்தைகளை (Keywords) எதிர்பார்த்து தான் மதிப்பெண் வழங்குவார்கள். எனவே, தேர்வில் அவற்றை அடிக்கோடிட்டோ அல்லது தனித்துக் காட்டியோ எழுதுவது முழு மதிப்பெண் (8/8) பெற உதவும்.

10th Standard Tamil: Quick Revision - Works, Authors, and Characters

கணப்பொழுதில் ஒரு விரைவுப் பார்வை(10ஆம் வகுப்பு - ஒரு மதிப்பெண் வினா - விடைகள்)

படைப்புகளும் ஆசிரியர்களும்

இயல் படைப்புகள் ஆசிரியர்கள்
1 அன்னை மொழியே பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம் தேவநேயப் பாவாணர்
காலக்கணிதம் கண்ணதாசன்
புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
2 பரிபாடல் கீரந்தையார்
மேகம் நாகூர்ரூமி
பிரம்மம் பிரபஞ்சன்
3 காசிக்காண்டம் அதிவீரராம பாண்டியர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன்
4 திருவிளையாடற் புராணம் பரஞ்சோதி முனிவர்
புதிய நம்பிக்கை கமலாலயன்
5 கம்பராமாயணம் கம்பர்
பாய்ச்சல் சா. கந்தசாமி
6 சிற்றகல் ஒளி ம.பொ.சிவஞானம்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
7 தேம்பாவணி வீரமாமுனிவர்
அக்கறை கல்யாண்ஜி
திருக்குறள் திருவள்ளுவர்

பாடத்தலைப்புகள், ஆசிரியர் மற்றும் கதைமாந்தர்கள்

இயல் பாடத்தலைப்புகள் ஆசிரியர் கதைமாந்தர்கள்
1 புயலிலே ஒரு தோணி
(விரிவானம்)
ப. சிங்காரம் பாண்டியன், கப்பித்தான் (மாலுமி), சுமத்ரா பிரயாணிகள், ஜப்பான் அதிகாரி
2 பிரம்மம்
(விரிவானம்)
பிரபஞ்சன் சௌந்தரா (தங்கை), அப்பா, அம்மா, அண்ணன், பாட்டி
3 கோபல்லபுரத்து மக்கள்
(விரிவானம்)
கி. ராஜநாராயணன் சுப்பையா, அன்னமய்யா, மணி, கொத்தாளி
4 திருவிளையாடற் புராணம்
(கவிதைப்பேழை)
பரஞ்சோதி முனிவர் குலேசபாண்டியன், புலவர் இடைக்காடனார், இறைவன்
புதிய நம்பிக்கை
(விரிவானம்)
கமலாலயன் மேரிஜேன், அம்மா-பாட்ஸி, வெள்ளைச்சீமி, தந்தை-சாம், மிஸ்-வில்ஸன்
5 பாய்ச்சல்
(விரிவானம்)
சா. கந்தசாமி அழகு, அனுமார (குரங்கு), ராமு
6 மங்கையராய்ப் பிறப்பதற்கே
(விரிவானம்)
- பத்தாம் வகுப்பு மாணவிகள்
  • தொகுப்பாளர்
  • முகில்நாச்சி (எம்.எஸ் சுப்புலட்சுமி)
  • மோகனா (பால சரஸ்வதி)
  • வளர்மதி (ராஜம் கிருஷ்ணன்)
  • அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்)
  • மாதவி (சின்னப்பிள்ளை)
7 தேம்பாவணி
(கவிதைப்பேழை)
வீரமாமுனிவர் கருணையன்
இராமானுசர் - நாடகம்
(விரிவானம்)
- இராமானுசர், கூரேசர், முதலியாண்டான், பூரணர்

ஆசிரியர் - இயற்பெயரும், சிறப்புப் பெயர்களும்

வ. எண் ஆசிரியர் இயற் பெயர், சிறப்புப் பெயர்
1. பெருஞ்சித்திரனார் பாவலரேறு (சிறப்புப் பெயர்)
2. கண்ணதாசன் முத்தையா (இயற்பெயர்)
3. நாகூர்ரூமி முகம்மது ரஃபி (இயற்பெயர்)
4. பிரபஞ்சன் வைத்தியலிங்கம் (இயற்பெயர்)
5. கி. ராஜநாராயணன் கரிசல் எழுத்தாளர் (சிறப்புப் பெயர்)
6. திருவள்ளுவர் பெருநாவலர், முதற்பாவலர், பொய்யில்புலவர், தெய்வப்புலவர் (சிறப்புப்பெயர்கள்)
7. கமலாலயன் வெ. குணசேகரன் (இயற்பெயர்)
8. கம்பர் கல்வியில் பெரியவர் (சிறப்புப் பெயர்)
9. நா. முத்துசாமி கூத்துப்பட்டறை நா. முத்துசாமி, கலைஞாயிறு (சிறப்புப்பெயர்கள்)
10. ம. பொ. சிவஞானம் சிலம்புச்செல்வர் (சிறப்புப் பெயர்)
11. வீரமாமுனிவர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (இயற்பெயர்)
இஸ்மத் சன்னியாசி - பாரசீகம், தூய துறவி - தமிழ் (சிறப்புப்பெயர்கள்)
12. கல்யாண்ஜி கல்யாணசுந்தரம் (இயற்பெயர்)
வண்ணதாசன் (புனை பெயர்)

10th Tamil Public Exam Time Management Tips & Study Plan 2026

பத்தாம் வகுப்பு தமிழ் - நேரமேலாண்மைக்கான கால அட்டவணை

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சரியான நேர மேலாண்மை அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பின்பற்றி தமிழைத் திட்டமிட்டு எழுதவும்.

வினா எண்கள் மதிப்பெண்கள் & தலைப்புகள் காலம்
1-15 ஒரு மதிப்பெண்கள் $$(15\times1)$$ 10 நிமிடம்
16-21 இரண்டு மதிப்பெண்கள் $$(4\times2)$$ 15 நிமிடம்
22-28 இரண்டு மதிப்பெண்கள் $$(5\times2)$$ 15 நிமிடம்
29-31 மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ 20 நிமிடம்
32-34 மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ 20 நிமிடம்
35-37 மூன்று மதிப்பெண்கள் $$(2\times3)$$ 20 நிமிடம்
38-42 நெடுவினா $$(5\times5)$$
  • செய்யுள்
  • விண்ணப்பம் (அல்லது) கடிதம்
  • படம் உணர்த்தும் கருத்து
  • படிவம் நிரப்புதல்
  • நிற்க அதற்குத் தக (அல்லது) மொழிபெயர்ப்பு
40 நிமிடம்
43-45 உரைநடை நெடுவினா $$(3\times8)$$
(அல்லது)
  • செய்யுள் நயம் பாராட்டல் வினா
  • துணைப்பாட கட்டுரை
  • பொதுக்கட்டுரை
30 நிமிடம்
1-45 மொத்த மதிப்பெண்கள் (100) 170 நிமிடம் (2 மணி 50 நிமிடம்)

திருப்புதல் நேரம் : 10 நிமிடம்

குறிப்பு : திருப்புதல் நேரத்தில் செய்ய வேண்டியவை:

  • வினா எண்களைச் சரிபார்த்தல்.
  • ஒரு மதிப்பெண் வினாக்களை உற்று நோக்குதல்.
  • அனைத்து வினா விடைகளையும் பதிவு செய்துள்ளாயா என்று சரிபார்க்கவும்.
  • வினா விடை மற்றும் கட்டுரைகளில் வரக்கூடிய கதை மாந்தர்கள், ஆசிரியர்கள் பெயர் மற்றும் முக்கிய குறிப்புச் சொற்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின் சரி செய்யவும்.

"வாழ்த்துக்கள்"

10th Tamil Public Exam Time Management Tips & Study Schedule 2026

பத்தாம் வகுப்பு - தமிழ்த் தேர்வு: நேர மேலாண்மைக்கான கால அட்டவணை

மொத்தம் 100 மதிப்பெண்கள்

எண் வினா எண்கள் விளக்கம் & மதிப்பெண்கள் காலம் (நிமிடங்கள்)
1 1 முதல் 15 வரை பலவுள் தெரிக - ஒரு மதிப்பெண்
\(15\times1=15\)
10 நிமிடங்கள்
2 16 முதல் 21 வரை குறுவினா - இரண்டு மதிப்பெண்
\(4\times2=8\)
12 நிமிடங்கள்
(1 வினாவிற்கு 3 நிமிடம்)
3 22 முதல் 28 வரை இரண்டு மதிப்பெண் - பயிற்சி வினாக்கள்
\(5\times2=10\)
10 நிமிடங்கள்
(1 வினாவிற்கு 2 நிமிடங்கள்)
4 29 முதல் 31 வரை உரைநடை - சிறுவினாக்கள், பத்தியைப்படித்து விடையளி
\(2\times3=6\)
10 நிமிடங்கள்
(1 சிறுவினாவிற்கு 7 நிமிடங்கள், பத்தி - 3 நிமிடங்கள்)
5 32 முதல் 34 வரை செய்யுள் - சிறுவினாக்கள், மனப்பாடம்
\(2\times3=6\)
10 நிமிடங்கள்
(1 சிறுவினாவிற்கு 7 நிமிடங்கள், மனப்பாடம் 3 நிமிடங்கள்)
6 35 முதல் 37 வரை இலக்கணச் சிறுவினா- அலகிடுதல், அணி
\(2\times3=6\)
10 நிமிடங்கள்
(1 வினாவிற்கு 5 நிமிடங்கள்)
7 38 முதல் 42 வரை செய்யுள் நெடுவினா, கடிதம், காட்சியை வர்ணித்தல், படிவம், மொழிபெயர்ப்பு
\(5\times5=25\)
45 நிமிடங்கள்
(செய்யுள் வினா 15, கடிதம் 15, காட்சி 5, படிவம் 5, மொழிபெயர்ப்பு 5 நிமிடங்கள்)
8 43 முதல் 45 வரை நெடுவினா \(3\times8=24\)
உரைநடை \(1\times8=8\), கட்டுரை \(1\times8=8\), துணைப்பாடம் \(1\times8=8\)
60 நிமிடங்கள்
(1 வினாவிற்கு 20 நிமிடங்கள்)
எழுதுவதற்கு ஆகும் மொத்த நேரம்: 167 நிமிடங்கள் (2:47 மணி)

திருப்புதல் நேரம் : 13 நிமிடங்கள்

மீதமுள்ள 13 நிமிடங்களில் (திருப்புதல் நேரத்தில்) செய்யவேண்டியவை:

  • வினா எண்களை சரிபார்த்தல் (பகுதி I, II, III).
  • ஒரு மதிப்பெண் விடைகளை சரிபார்த்தல்.
  • அனைத்து வினாக்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்தல்.
  • வினா விடை மற்றும் கட்டுரைகளில் வரக்கூடிய கதை மாந்தர்கள், ஆசிரியர்கள் பெயர், மற்றும் குறிப்புச்சொற்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின் சரிசெய்யவும்.
  • மேற்கோள் பாடல்களை சரிபார்த்தல்.

வாழிய வளர் செந்தமிழ்

அனைவரும் நல்ல மதிப்பெண் பெற அண்ணனின் நல்வாழ்த்துக்கள்

10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper

அரையாண்டுப் பொதுத் தேர்வு - 2024
பத்தாம் வகுப்பு - தமிழ்

நேரம்: 3.00 மணி மதிப்பெண்கள்: 100
பகுதி - I (மதிப்பெண்கள்: 15)

i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
  • அ) குலை வகை
  • ஆ) மணி வகை
  • இ) கொழுந்து வகை
  • ஈ) இலை வகை
விடை: ஆ) மணி வகை
2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
  • அ) துலா
  • ஆ) சீலா
  • இ) குலா
  • ஈ) இலா
விடை: ஈ) இலா
3. 'மாலவன் குன்றம் போனாலென்ன வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
  • அ) திருப்பதியும் திருத்தணியும்
  • ஆ) திருத்தணியும் திருப்பதியும்
  • இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
  • ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை: அ) திருப்பதியும் திருத்தணியும்
4. "பாடுகிமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
  • அ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
  • ஆ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
  • இ) கடல் நீர் ஒலித்தல்
  • ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
விடை: ஆ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
  • அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  • ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
  • இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  • ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை: ஈ) அங்கு வறுமை இல்லாததால்
6. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று __________ வேண்டினார்.
  • அ) கருணையன் எலிசபெத்துக்காக
  • ஆ) எலிசபெத், தமக்காக
  • இ) கருணையன், பூக்களுக்காக
  • ஈ) எலிசபெத், பூமிக்காக
விடை: அ) கருணையன் எலிசபெத்துக்காக
7. இங்கு நகரப் பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்பது __________ வினா. அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது __________ விடை.
  • அ) ஐயவினா, வினா எதிர் வினாதல்
  • ஆ) அறிவினா, மறை விடை
  • இ) கொளல் வினா, இனமொழி விடை
  • ஈ) அறியா வினா, சுட்டு விடை
விடை: ஈ) அறியா வினா, சுட்டு விடை
8. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசோடு எதிர்த்துப் போரிடல் __________ திணை.
  • அ) வஞ்சித்திணை
  • ஆ) காஞ்சித்திணை
  • இ) வாகைத் திணை
  • ஈ) நொச்சித் திணை
விடை: ஆ) காஞ்சித்திணை
9. 'கத்துங்குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்' என்ற பாரதியார் பாடலில் அமைந்துள்ளது
  • அ) பால் வழுவமைதி
  • ஆ) கால வழுவமைதி
  • இ) மரபு வழுவமைதி
  • ஈ) திணை வழுவமைதி
விடை: இ) மரபு வழுவமைதி
10. கூற்று 1: போராட்டப் பண்புகளே கலைஞர். கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
  • அ) கூற்று (1) சரி (2) தவறு
  • ஆ) கூற்று (1) மற்றும் (2) தவறு
  • இ) கூற்று (1) தவறு (2) சரி
  • ஈ) கூற்று (1) மற்றும் (2) சரி
விடை: ஈ) கூற்று (1) மற்றும் (2) சரி
11. "கானடை" என்பதைப் பிரித்தால் பொருந்தாத தொடரைத் தேர்க.
  • அ) கான் அடை - காட்டைச் சேர்
  • ஆ) கால் நடை - காட்டுக்கு நடத்தல்
  • இ) கால்நடை - காலால் நடத்தல்
  • ஈ) கால் உடை - காலால் உடைத்தல்
விடை: ஆ) கால் நடை - காட்டுக்கு நடத்தல் (அல்லது) அ) கான் அடை - காட்டைச் சேர்
குறிப்பு: சரியான விடை "கான் + அடை" எனப் பிரியும். இதன் பொருள் காட்டைச் சேர் அல்லது காட்டுக்கு நடத்தல். ஆனால் பொருந்தாத தொடர் என்று கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் "கால் உடை" என்பது முற்றிலும் மாறுபட்டது. ஆனால் வினாத்தாள் அமைப்பின் படி, "கால்நடை" என்பது காலால் நடத்தல் எனப் பொருள்படும். "கானடை" என்பது "கான்+அடை" (காட்டைச் சேர்).
பாடலைப் படித்து பின் வரும் வினாக்களுக்கு விடை தருக.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று"
12. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
  • அ) நீதிவெண்பா
  • ஆ) புறநானூறு
  • இ) வெற்றிவேற்கை
  • ஈ) கொன்றைவேந்தன்
விடை: அ) நீதிவெண்பா
13. பாடலின் சீர் மோனைச் சொற்கள்
  • அ) அருளை, அருத்துவதும்
  • ஆ) அருளை, அறிவை
  • இ) அகற்றி, அருந்துணையாய்
  • ஈ) அறிவை, அகற்றி
விடை: அ) அருளை, அருத்துவதும்
14. அருந்துணையாய் - இச்சொல்லைப் பிரித்தால்
  • அ) அருந்துணை + யாய்
  • ஆ) அருந்து + துணையாய்
  • இ) அருமை + துணையாய்
  • ஈ) அரு + துணையாய்
விடை: இ) அருமை + துணையாய்
15. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது
  • அ) அன்பு
  • ஆ) கல்வி
  • இ) மயக்கம்
  • ஈ) செல்வம்
விடை: ஆ) கல்வி
பகுதி - II (மதிப்பெண்கள் 18)

பிரிவு - 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி. (வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (4x2=8)

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ) செயற்கை நுண்ணறிவுக் கருவியான வாட்சன் சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

விடை: வாட்சன் என்னும் செயற்கை நுண்ணறிவுக் கருவி எதைக் கண்டுபிடித்தது?

ஆ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

விடை: உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
17. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
  • "வாருங்கள்" என வரவேற்றல்.
  • "இருக்கையில் அமருங்கள்" என்று உபசரித்தல்.
  • "நலம் தானா?" என நலம் விசாரித்தல்.
  • "நீர் அருந்துங்கள்" என்று நீர் கொடுத்தல்.
18. குறிப்பு வரைக : அவையம்

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. இவற்றுள் 'அவையம்' என்னும் மன்றம் முக்கியமானதாகும். அவையம் பற்றிப் புறநானூறு "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று குறிப்பிடுகிறது.

19. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் நோயாளியிடம் காட்டும் அன்பு, நோயைக் குணப்படுத்தும் பாதியாக அமைகிறது. "நான் குணமடைவேன்" என்ற நோயாளியின் நம்பிக்கை மீதி மருந்தாகச் செயல்படுகிறது. மருத்துவரின் கனிவான பேச்சு மருந்தை விடச் சிறந்த நிவாரணியாகும்.

20. "காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" உவமை உணர்த்தும் கருத்து யாது?

இளம்பயிர் நெல்மணியாக முதிர்வதற்கு முன்பே வெயிலின் கொடுமையால் வாடி காய்ந்து போவதைப் போல, இளம் வயதிலேயே என் தலைவனை இழந்து நான் வாடுகிறேன் என்று வீரன் ஒருவன் தன் துயரத்தை வெளிப்படுத்துகிறான்.

21. "உலகு" என முடியும் திருக்குறளை எழுதுக.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5x2=10)

22. பாவின் வகைகளையும் அதன் ஓசைகளையும் எழுதுக.
  1. வெண்பா - செப்பலோசை
  2. ஆசிரியப்பா - அகவலோசை
  3. கலிப்பா - துள்ளலோசை
  4. வஞ்சிப்பா - தூங்கலோசை
23. தொழிற்பெயருக்கும், வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டினைக் கூறு.
தொழிற்பெயர் வினையாலணையும் பெயர்
வினையை உணர்த்தும். தொழிலைச் செய்யும் கருத்தாவை உணர்த்தும்.
காலம் காட்டாது. காலம் காட்டும்.
24. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களை பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
சிறு - சீறு

விடை: பாம்பு சிறு குச்சியைப் பார்த்துக் கூட சீறும்.

25. கலைச்சொல் தருக:
  • அ) Screenplay - திரைக்கதை
  • ஆ) Folk literature - நாட்டுப்புற இலக்கியம்
26. பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.

எதற்காக எழுதுகிறேன் என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால் நான் கண்டிக்கப்படவும் திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.

விடை: "எதற்காக எழுதுகிறேன்?" என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால், நான் கண்டிக்கப்படவும் திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.

27. தொகைச் சொற்களை பிரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக.
  • அ) முப்பால் - மூன்று + பால் (௩)
  • ஆ) ஐந்திணை - ஐந்து + திணை (௫)
28. பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்

அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்

  • அமர் - பகுதி
  • த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்)
  • த் - இறந்தகால இடைநிலை
  • ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
பகுதி - III (மதிப்பெண்கள் 18)

பிரிவு - 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளி. (2x3=6)

29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

ஆம், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனைப் பல வழிகளில் மேம்படுத்துகின்றன:

  • மருத்துவம்: செயற்கை உறுப்புகள், ரோபோ அறுவை சிகிச்சைகள் மனித ஆயுளை நீட்டிக்கின்றன.
  • தொடர்பு: இணையம் மற்றும் செல்பேசி மூலம் உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது.
  • கல்வி: இணையவழிக் கல்வி அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறது.
  • இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற தீமைகளையும் கருத்தில் கொண்டு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 'மலைபடுகடாம்' 583 அடிகளைக் கொண்டது. இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

i) மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
விடை: 583 அடிகளைக் கொண்டுள்ளது.
ii) மலைபடுகடாமின் மற்றொரு பெயர் என்ன?
விடை: கூத்தராற்றுப்படை.
iii) மலைபடுகடாம் என இந்நூல் அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை: மலையை யானையாக உருவகம் செய்து, மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
31. மொழிபெயர்ப்பின் பயன்கள் ஐந்தினைக் கூறு.
  1. பிறமொழி இலக்கிய அறிவைப் பெற முடிகிறது.
  2. பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்கிறது.
  3. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுகிறது.
  4. உலக ஒற்றுமையை வளர்க்கிறது.
  5. புதிய சொற்கள் தமிழுக்குக் கிடைக்கின்றன.

பிரிவு - 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. (34-வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்) (2x3=6)

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
  • செந்தாமரைத் தேனைக்குடித்துச் சிறகடிக்கும் வண்டு போல, நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள வாழ்த்துகிறோம்.
  • முக்கனியே, முத்தமிழே, பாண்டியன் மகளே, திருக்குறளின் பெருமையே என்று வாழ்த்துகிறார்.
  • பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்குபவளே என்று போற்றுகிறார்.
33. இரண்டாம் இராசராச சோழன் எவ்வாறெல்லாம் இருந்ததாக மெய்க்கீர்த்தி கூறுகிறது?
  • யானைகள் மட்டுமே பிணிக்கப்பட்டன; மக்கள் பிணிக்கப்படவில்லை.
  • சிலம்புகள் மட்டுமே புலம்பின; மக்கள் புலம்பவில்லை.
  • ஓடைகள் மட்டுமே கலக்கமடைந்தன; மக்கள் கலக்கமடையவில்லை.
  • மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டன; மக்கள் வடுபடவில்லை.
  • இவ்வாறு சோழ நாட்டில் மக்கள் துன்பமின்றி இன்புற்று வாழ்ந்தனர்.
34. அ) 'நவமணி' எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.
நவமணி வடக்காயில் போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாட
துவமணி மரங்கள் தோறும்
துணரணி சுனைகள் தோறும்
உவமணி கானம் கொள்
என்று ஒலித்து அழுவ போன்றே.

(அல்லது)

ஆ) 'விருந்தினனாக' எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின்செல்வ தாதல்
பரிந்து நன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

பிரிவு - 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2x3=6)

35. விடை வகைகளைக் கூறி ஏதேனும் இரண்டு வகை விடைகளை உதாரணத்துடன் விளக்கு.

விடை 8 வகைப்படும். அவையாவன: சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை.

உதாரணம்:

  • சுட்டு விடை: "சென்னைக்கு வழி யாது?" என்று கேட்டால், "இது" என்று சுட்டிக் காட்டுவது.
  • மறை விடை: "கடைக்குப் போவாயா?" என்ற கேள்விக்கு "போகமாட்டேன்" என மறுத்துக் கூறுவது.
36. நிரல்நிறையணியைச் சான்றுடன் விளக்கு.

விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

சான்று:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

பொருத்தம்: இக்குறளில் அன்பு, அறன் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பு, பயன் என்ற சொற்களோடு முறையே இணைத்துப் பொருள் கொள்ள வைத்துள்ளமையால் இது நிரல்நிறை அணியாகும்.

37. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
சீர்அசைவாய்பாடு
அஞ்சும்நேர் நேர்தேமா
அறியான்நிரை நேர்புளிமா
அமைவிலன்நிரை நிரைகருவிளம்
ஈகலான்நேர் நிரைகூவிளம்
தஞ்சம்நேர் நேர்தேமா
எளியன்நிரை நேர்புளிமா
பகைக்குநிரைபுபிறப்பு
பகுதி - IV (மதிப்பெண்கள் 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி. (5x5=25)

38. அ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

குறிப்புச் சட்டம்: முன்னுரை, குசேல பாண்டியனின் அவமதிப்பு, இடைக்காடனாரின் கோபம், இறைவன் செயல், மன்னனின் மன்னிப்பு, இறைவனின் அருள், முடிவுரை.

கபிலரின் நண்பரான இடைக்காடனார், குசேல பாண்டியனைப் புகழ்ந்து பாடச் சென்றார். மன்னன் அவரை அவமதித்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அவர் பொருட்டு கோவிலை விட்டு நீங்கி வடதிருவாலவாயில் சென்று தங்கினார். மன்னன் தன் பிழையை உணர்ந்து மன்னிப்பு கோரினான். இறைவன் மீண்டும் கோவிலுக்குத் திரும்பினார்.

(அல்லது)

ஆ) கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

கருணையன் தன் தாய் எலிசபெத்தின் மறைவால் அடைந்த துயரத்தை வீரமாமுனிவர் மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். "மலர் படுக்கையில் உறங்க வேண்டிய தாய், மண் படுக்கையில் உறங்குகிறாளே" என்று வருந்துகிறான். இயற்கையே அவனோடு சேர்ந்து அழுவது போல கவிஞர் வருணிக்கிறார். பறவைகள், வண்டுகள், மலர்கள் யாவும் துயருற்றன.

39. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்: [உங்கள் பெயர்], [முகவரி].
பெறுநர்: ஆசிரியர் அவர்கள், [நாளிதழ் பெயர்], [இடம்].
பொருள்: உழவுத் தொழில் பற்றிய கட்டுரை வெளியிடுதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். தங்கள் நாளிதழின் பொங்கல் மலரில் வெளியிடுவதற்காக 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். இக்கட்டுரை உழவர்களின் சிறப்பையும், அவர்கள் படும் கஷ்டங்களையும், நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் விளக்குகிறது. இதனைத் தங்கள் பொங்கல் மலரில் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
[உங்கள் கையொப்பம்].

(அல்லது)

ஆ) 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மாணவர்கள் புத்தகங்களை எடுத்துப் படிப்பது போன்ற காட்சி.

கவிதை:
வெட்டிய மரத்தின் மீதமர்ந்து
மரம் வளர்க்கும் கல்வி
"மரம் சாய்ந்தால், மனிதனும் சாய்வான்.
என் மூச்சின்றி, உன் வாழ்வில்லை.
விழித்திடு மனிதா,
உன் சந்ததியின் மூச்சைக் காத்திடு."

41. ரவி தன் தந்தை முருகனிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் ரவியிடம் 500 ரூபாயும், 14, பாரதி தெரு, ஜமால் புரம், ஊசூர், வேலூர் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற ரவியாகத் தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

நூலக உறுப்பினர் படிவம்

பெயர்: ரவி

தந்தை பெயர்: முருகன்

பிறந்த தேதி: [தேதி]

முகவரி: 14, பாரதி தெரு, ஜமால் புரம், ஊசூர், வேலூர் மாவட்டம்.

கட்டணம்: ரூ. 500

இடம்: ஊசூர்

தேதி: [இன்றைய தேதி]

கையொப்பம்: ரவி

42. அ) கல்வெட்டுகள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • கல்வெட்டுகளின் மேல் கிறுக்குவதைத் தவிர்ப்பேன்.
  • நினைவுச் சின்னங்களைச் சுற்றி குப்பைகள் போடாமல் தூய்மையாக வைப்பேன்.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு இவற்றின் அருமையை எடுத்துரைப்பேன்.
  • சிதைந்த நிலையில் உள்ளவற்றைச் சீரமைக்க அரசுக்குக் கோரிக்கை வைப்பேன்.

(அல்லது)

ஆ) மொழிபெயர்க்க :

If you talk to a man in a language, he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes into his heart. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going.

தமிழாக்கம்:
ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால், அது அவன் அறிவைச் சென்றடையும். ஆனால், அவனுடைய தாய்மொழியில் பேசினால், அது அவன் இதயத்தைத் தொடும். மொழியே ஒரு கலாச்சாரத்தின் வழிகாட்டி வரைபடம் ஆகும். அது அம்மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது.

பகுதி - V (மதிப்பெண்கள் 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3x8=24)

43. அ) பன்முகக் கலைஞர்:

போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ் கலைஞர் - கவிதைக் கலைஞர் ஆகிய தலைப்புகள் கொண்டு ஒரு கட்டுரை வரைக.

முன்னுரை: மு. கருணாநிதி அவர்கள் பன்முகத் திறமை கொண்ட ஒரு கலைஞர். அவரின் பல்வேறு பரிமாணங்களைக் காண்போம்.

போராட்டக் கலைஞர்: சிறுவயதிலேயே இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர். கல்லக்குடி போராட்டம் மூலம் சிறை சென்றவர்.

பேச்சுக் கலைஞர்: தனது அடுக்குமொழிப் பேச்சாற்றலால் தமிழர்களைக் கட்டிப்போட்டவர்.

நாடகக் கலைஞர்: பல சீர்திருத்த நாடகங்களை எழுதி, அரங்கேற்றி நடித்தவர்.

திரைக் கலைஞர்: 'பராசக்தி' போன்ற படங்களுக்கு அனல் பறக்கும் வசனம் எழுதித் திரையுலகில் புரட்சி செய்தவர்.

முடிவுரை: இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

(அல்லது)

ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.

தமிழர் பண்பாடே விருந்தோம்பல்

முன்னுரை:
"விருந்தோம்பித் தான்செலத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று" என்றார் வள்ளுவர். தமிழர்களின் தலையாய பண்பான விருந்தோம்பலை, என் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு நான் செய்த விதத்தை இக்கட்டுரையில் விவரிக்கிறேன்.

வரவேற்பு:
சென்ற வாரம் என் மாமா குடும்பத்தினர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தனர். "மோப்பக் குழையும் அனிச்சம்" என்ற குறளுக்கு ஏற்ப, முகம் வாடாமல் மலர்ந்த முகத்துடன் "வாருங்கள்! வாருங்கள்!" என்று கூறி அவர்களை இன்முகத்துடன் வரவேற்றேன். அவர்கள் கையில் இருந்த பைகளை வாங்கி வைத்து, அவர்களை இருக்கையில் அமரச் செய்தேன்.

இன்சொல் பேசுதல்:
வெயிலில் வந்த அவர்களுக்கு, தாகம் தணிய குளிர்ந்த நீர் மற்றும் மோர் வழங்கினேன். "பயணம் எல்லாம் நன்றாக இருந்ததா? வீட்டில் அனைவரும் நலமா?" என்று நலம் விசாரித்தேன். அவர்கள் களைப்பு நீங்கும் வரை இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.

உணவு பரிமாறுதல்:
மதிய வேளையில் தலைவாழை இலை விரித்து, நீர் தெளித்து, என் தாயார் சமைத்த அறுசுவை உணவைப் பரிமாறினேன். "இன்னும் கொஞ்சம் சாதம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த கூட்டு ருசியாக இருக்கும்" என்று வற்புறுத்தி, அன்போடு உணவளித்தேன். அவர்கள் வயிறார உண்டதைக் கண்டு என் மனம் நிறைந்தது.

வழியனுப்புதல்:
மாலை வேளையில் அவர்கள் ஊருக்குப் புறப்பட்டனர். அவர்களுக்குத் தாம்பூலம் மற்றும் சிறு பரிசுகளைக் கொடுத்தேன். பேருந்து நிறுத்தம் வரை சென்று, "மீண்டும் வாருங்கள்" என்று கூறி அன்புடன் வழியனுப்பி வைத்தேன்.

முடிவுரை:
விருந்தினரைப் பேணுவது ஒரு கலை மட்டுமல்ல, அது நம் கடமையும் ஆகும். வந்த விருந்தினரை இன்முகத்‌துடன் உபசரித்து அனுப்பியதில், எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்பட்டது.

44. அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனிதநேயத்தை விவரிக்கவும்.

முன்னுரை: ராமானுஜர், இந்தியாவின் முக்கியமான தத்துவஞானியாகவும், சமூக சீர்திருத்தியாகவும் அறியப்படுகிறார். அவர் வாழ்நாளில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேயக் கருத்தை பரப்பியவர்.

சாதி, மத வேற்றுமைகளை கடந்து மனிதநேயத்தை காப்பது:
ராமானுஜர் சமூகத்தில் நிலவும் சாதி, மத பேதங்களை முறியடிக்க முயன்றார். இவர் எந்தவொரு மனிதனையும் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் எனப் பார்ப்பதில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஆதரித்து, அவர்களுக்கும் விஷ்ணு வழிபாட்டில் சமமான உரிமை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அன்பும் கருணையும் நிறைந்த வாழ்க்கை:
நாடகங்களில், ராமானுஜர் தன் பக்தர்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும் கூட கருணையுடன் நடந்துகொள்வதை காணலாம். அவர் தன் குரு யாதவபிரகாசர் கூட தன்னை விரட்டியபோதும், அவரை வெறுக்காமல் உண்மையான பக்தி மற்றும் மனிதநேயத்தைக் காட்டினார்.

கல்வியும் பக்தியும் அனைவருக்கும் உரியது (மந்திரம் உபதேசித்தல்):
அவருடைய மனிதநேயம் கல்வியின் வாயிலாகவும் வெளிப்படுகிறது. வேதங்களை பின்பற்றத் தகுதியற்றவர்கள் படிக்கக் கூடாது என்று கடும்போக்குவாதிகள் கூறியபோதும், ராமானுஜர் அதற்கு எதிராக நின்றார்.

இராமானுசர், திருக்கோட்டியூர் நம்பியிடம் "ஓம் நமோ நாராயணாய" என்னும் எட்டெழுத்து மந்திரத்தைக் கற்றார். "இம்மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது, மீறினால் நரகம் செல்வாய்" என்று குரு கூறினார். ஆனால் இராமானுசர், "நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தில் கோவில் கோபுரத்தின் மீதேறி அனைவருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். இதுவே அவரின் மனிதநேயத்தின் உச்சமாகும்.

பக்தியும் சமத்துவமும்:
ராமானுஜர் வாழ்க்கை முழுவதும் பக்தியையும் சமத்துவத்தையும் பிரபலப்படுத்தினார். நாடகங்களில் அவர் கோவில்களின் கதவை அனைவருக்கும் திறந்து வைத்தார், சாதி, மத பேதமின்றி அனைவரும் இறைவனிடம் சமமாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

முடிவுரை:
ராமானுஜர் நாடகங்களில் மனிதநேயம் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கப்படுகிறது. அவர் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வேண்டும், பக்தியும் கல்வியும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்று போராடினார்.

(அல்லது)

ஆ) அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.

முன்னுரை:
கு. அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' சிறுகதை, எளிய மனிதர்களிடையே இருக்கும் ஈரமான அன்பையும், மனிதநேயத்தையும் எடுத்துரைக்கிறது. இக்கதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தராக வீராசாமி திகழ்கிறார்.

குப்பனின் நிலை:
சென்னையில் ஒரு விறகுக்கடையில் வேலை பார்க்கும் குப்பன், எழுதப்படிக்கத் தெரியாத ஒரு வெகுளி. அவன் நோயுற்று, தனிமையில் வாடும் போது அவனுக்கு ஆறுதலாக இருப்பவர் வீராசாமி.

வீராசாமியின் மனிதநேயம்:
குப்பனுக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காட்டுவதும், அவனுக்காகப் பதில் கடிதம் எழுதுவதும் வீராசாமிதான். குப்பன் உடல்நலம் குன்றி இருந்தபோது, "பயப்படாதே குப்பா... நான் இருக்கிறேன்" என்று வீராசாமி கூறிய அந்த ஒரு வார்த்தை, குப்பனுக்கு ஆயிரம் யானை பலத்தைத் தந்தது. பணம், காசு கொடுப்பதை விட, "நான் இருக்கிறேன்" என்ற ஆறுதல் வார்த்தையே ஆகச்சிறந்த மனிதநேயம் ஆகும்.

முடிவுரை:
ஆதரவற்றுக் கிடப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வீராசாமி போன்ற மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

45. அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்கு சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

நுழைவுவாயில் - கரகாட்டம் - பரதநாட்டியம் - பேச்சரங்கம் - பாட்டரங்கம் - மாறுவேடம் - ஓவியம் - மணல் சிற்பம்.

முன்னுரை:
எங்கள் ஊரான திருநெல்வேலியில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் கலைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வ.உ.சி. மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு நான் சென்று வந்த அனுபவத்தை இக்கட்டுரையில் காண்போம்.

கலைகளின் சங்கமம்:
நம் தமிழ்நாட்டில் பல சிறப்பான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. அவற்றில் பல இன்று மறைந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு இந்த விழாவை நடத்துகிறது. இங்கு, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தென் மாவட்டங்களின் சிறப்பான வில்லுப்பாட்டு, போன்ற பல கலைகள் நடைபெற்றன. அவற்றைக் நேரடியாகக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அரங்குகள் அமைப்பு:
விழா நடைபெறும் திடலின் நுழைவு வாயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கோபுரத்தின் வடிவத்தில் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும், பல மேடைகளில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தைப் போலவே ஒரு அரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருந்தது.

கலை நிகழ்ச்சிகள்:
தமிழ்நாட்டின் கலைகள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநில கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது வெவ்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

விளையாட்டு அரங்குகள்:
குழந்தைகளைக் கவரும் வகையில் இராட்சச ராட்டினம், சிறிய தொடர்வண்டி, மேஜிக் ஷோ போன்ற பல விளையாட்டு அரங்குகள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நுழைவுக் கட்டணம்:
கலைத் திருவிழாவிற்குள் செல்ல சிறிய நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால், காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

முடிவுரை:
இந்தக் கலைத் திருவிழாவிற்குச் சென்றது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல், நமது பாரம்பரியக் கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவியது. இது போன்ற விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.

(அல்லது)

ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.

முன்னுரை - விண்வெளியில் தமிழரின் அறிவு - கல்பனா சாவ்லா - விண்வெளிப் பயணம் - பெருமைகள் - முடிவு - விண்ணியலில் வருங்காலத்தில் செய்ய வேண்டியவை - முடிவுரை.

விண்வெளியில் தமிழரின் சாதனை

முன்னுரை:
"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்" என்றார் பாரதி. இன்று தமிழர்கள் விண்வெளியையே அளந்து கொண்டிருக்கிறார்கள். பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை விண்வெளி ஆய்வில் தமிழர்களின் பங்களிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியில் தமிழரின் அறிவு:
சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கு வானியல் அறிவு இருந்தது. "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்" என புறநானூறு கோள்களின் இயக்கத்தைக் கூறுகிறது. இன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) பல முக்கிய திட்டங்களில் தமிழர்கள் இயக்குநர்களாகப் பணியாற்றுவது நம் மரபணுவிலேயே ஊறிய அறிவுக்குச் சான்றாகும். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா, வீரமுத்துவேல் ஆகியோர் இத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கல்பனா சாவ்லா:
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. இவர் 1997 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். கொலம்பியா விண்கலம் விபத்தில் அவர் மறைந்தாலும், பல இளைஞர்களுக்கு விண்வெளிக் கனவை விதைத்துச் சென்றுள்ளார்.

விண்வெளிப் பயணம் மற்றும் பெருமைகள்:
சந்திரயான் - 1 திட்டத்தின் திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டார். இத்திட்டம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது. மங்கள்யான் திட்டம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்தது. அண்மையில் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி உலக சாதனை படைத்தது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழர் வீரமுத்துவேல் செயல்பட்டார் என்பது நமக்கு மிகப் பெரும் பெருமையாகும்.

விண்ணியலில் வருங்காலத்தில் செய்ய வேண்டியவை:
விண்வெளித் துறையில் இந்தியா மென்மேலும் வளர வேண்டும். விண்வெளிக் குப்பைகளை அகற்றுதல், வேற்றுக் கிரகங்களில் மனிதக் குடியேற்றம் பற்றிய ஆய்வு, ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல் போன்றவை வருங்காலத் திட்டங்களாகும். இதில் தமிழர்களின் பங்கு மென்மேலும் உயர வேண்டும்.

முடிவுரை:
அறிவியலில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகம் உணர்ந்துள்ளது. "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதியின் வாக்குப்படி, தமிழர்கள் விண்வெளியிலும் தங்கள் முத்திரையைப் பதித்துத் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper Page No. 1 10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper Page No. 2 10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper Page No. 3 10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper Page No. 4