பருவம்-2 அலகு 1: உணவும் உடல்நலமும்
2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்
2nd EVS Environmental Science : Term 2 Unit 1 : Food and Health
நீங்கள் கற்க இருப்பவை
* உணவின் மூலங்கள்
* சத்தான உணவுப் பொருளுக்கும் நொறுக்குத் தீனிக்கும் இடையேயான வேறுபாடு
நிலா: தாத்தா! இந்த வயல் இவ்வளவு அழகாக உள்ளதே! இது என்ன நெல் வயலா?
தாத்தா: ஆமாம் நிலா! நாம் அரிசியை நெல் தாவரத்திலிருந்து பெறுகிறோம்.
நிலா: நமக்குத் தேவையான அனைத்து உணவும் தாவரத்திலிருந்துதான் கிடைக்கிறதா தாத்தா?
தாத்தா: ஆமாம். நாம் பெரும்பான்மையான உணவுப் பொருள்களை தாவரங்களிலிருந்தும் சில உணவுப் பொருள்களை விலங்குகளிடமிருந்தும் பெறுகிறோம்.
தாவரங்கள் நமக்குத் தருவன...
தானியங்கள், பருப்பு வகைகள்
நாம் தானியங்கள், பருப்பு வகைகளைத் தாவரங்களிலிருந்து பெறுகிறோம். அரிசி கோதுமை போன்றவை தானியங்கள். சிறு தானியங்களும் தானிய வகைகளே. நமது உணவில் தானியங்களும், பருப்பு வகைகளும் முக்கியப்பங்கு வகிப்பதுடன் உடலை நலமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
தானியங்கள்
பருப்பு வகைகள்
எண்ணெய்
நாம் விதைகள், கொட்டைகளில் இருந்து எண்ணெயைப் பெறுகிறோம். இவற்றையே சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
குளம்பி (காப்பி), தேநீர்
காப்பித்தூள் காப்பிக்கொட்டையிலிருந்தும், தேயிலைத்தூள் தேயிலைகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கின்றன.
வெல்லம், சர்க்கரை
கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து வெல்லம் மற்றும் சர்க்கரையைப் பெறுகிறோம்.
நறுமணப் பொருள்கள்
தாவரங்கள் உணவுப் பொருள்களை மட்டுமின்றி நறுமணப் பொருள்களையும் நமக்குத் தருகின்றன. நறுமணப் பொருள்கள் உணவின் மணத்தையும் சுவையையும் கூட்டுகின்றன.
காய்கறிகள், பழங்கள், கீரைகள்
பயிற்சி
கொடுக்கப்பட்ட சொற்களைக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டறிந்து வட்டமிடுக. படத்திற்குரிய பெயரை எழுதுக.
(கீரை, காப்பிக்கொட்டை, சர்க்கரை, பட்டாணி, தேயிலை, கேழ்வரகு, மிளகாய், இலவங்கம்)
விலங்குகள் நமக்குத் தருவன...
பால், முட்டை, இறைச்சி போன்றவற்றை விலங்குகளிடமிருந்து நாம் பெறுகிறோம்.
ஆறு, ஏரி, குளம், கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து நண்டு, இறால், மீன்கள் போன்றவற்றைப் பெறுகிறோம்.
தேனீக்களிடமிருந்து தேன் கிடைக்கிறது.
பால் பொருள்கள்
நாம் பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக் கட்டி போன்றவற்றைப் பெறுகிறோம். நாம் தினமும் பால் அல்லது பால் பொருள்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு உகந்தது.
பயிற்சி
படங்களை உற்றுநோக்கி உணவு வகைகளின் பெயர்களை எழுதுக.
(பால், இறைச்சி, முட்டை, நெய், தயிர்)
சத்தான உணவும் நொறுக்குத் தீனியும்
நிலா: தாத்தா! நான் இந்த பீட்சாவைச் சாப்பிடலாமா?
தாத்தா: வேண்டாம் நிலா! நான் உன்னைச் சத்தான உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளுக்கு இடையே நடைபெறும் ஓட்டப்பந்தயத்திற்கு அழைத்துச் செல்கிறேன். பந்தயத்தைப் பார்த்த பிறகு இதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என நீயே முடிவு செய்.
நிலா: ஓட்டப்பந்தயமா தாத்தா! ஓ ...போகலாமே!
தாத்தா: உடலுக்கு நலத்தையும் சத்தையும் அளிப்பது யார் என சத்தான உணவுக்கும் நொறுக்குத்தீனிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாம். இதற்காக தங்களுக்கிடையே ஓட்டப்பந்தயம் வைத்து தீர்வு காண முடிவெடுத்துள்ளனர்.
சத்தான உணவுக்கும் நொறுக்குத்தீனிக்கும் இடையேயான ஓட்டப்பந்தயம்
போட்டி தொடங்கியது.
இரண்டு அணிகளும் வேகமாக ஓடின.
நொறுக்குத் தீனிக் குழு களைப்படைந்து பின் தங்கியது.
சத்தான உணவுக்குழு வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
தாத்தா: நிலா, சில உணவுப்பொருள்கள் சுவையாக இருந்தாலும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. இவை நம் உடல் எடையைக் கூட்டி தீங்கு விளைவிக்கின்றன. இவற்றையே நொறுக்குத் தீனிகள் என்கிறோம். சில உணவு வகைகள் உடலின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவுகின்றன. இவற்றையே சத்தான உணவுகள் என்கிறோம். எனவே சத்தான உணவை உண்போம்! நலமோடு வாழ்வோம்!
நிலா: இனி வரும் காலங்களில் சத்தான உணவையே உண்ண வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் தாத்தா!
உங்களுக்குத் தெரியுமா?
கேரட்டினை உண்பதால் நம் பார்வைத்திறன் அதிகரிப்பதுடன் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள்
அடிக்கடி உண்ணும் உணவு வகைகளுக்கு '1' எனவும்
எப்பொழுதாவது உண்ணும் உணவு வகைகளுக்கு '2' எனவும்
தவிர்க்க வேண்டிய உணவு வகைகளுக்கு '3' எனவும் குறிப்பிடுக.
ஆசிரியருக்கான குறிப்பு: அடிக்கடி நொறுக்குத்தீனிகளை உண்பதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடவும்.
பயிற்சி
படத்தில் மறைந்துள்ள உணவுப் பொருள்களைக் கண்டறிந்து வண்ணமிட்டு எண்ணி எழுதுக.