Thursday, July 31, 2025

கவிதைப்பேழை: தமிழ்விடு தூது | 10 ஆம் வகுப்பு தமிழ் | Samacheer Kalvi

கவிதைப்பேழை: தமிழ்விடு தூது

நுழையும்முன்

தமிழின் பெருமையைப் பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை, அதற்கொரு கருவி. கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி என்று பல தூது வாயில்களைப்பற்றி அறிந்துள்ளோம். தமிழையே தூதுப் பொருளாக்கியுள்ளது 'தமிழ்விடு தூது'. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியன இச்சிற்றிலக்கியத்தில் விரவியுள்ளன.

சீர்பெற்ற செல்வம்

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம் எல்லாம்

வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே* - அந்தரமேல்

முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம் இலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ

நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக்குலவும்

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு

ஆன நவரசம்உண் டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ

ஒழியா வனப்புஎட்டு உடையாய்....

(கண்ணிகள் 69-76)

சொல்லும் பொருளும்

குறம், பள்ளு - சிற்றிலக்கிய வகைகள்; மூன்றினம் - துறை, தாழிசை, விருத்தம் ; திறமெல்லாம் - சிறப்பெல்லாம்; சிந்தாமணி - சிதறாத மணி(சீவகசிந்தாமணி), என்னும் இருபொருளையும் குறிக்கும் ; சிந்து - ஒருவகை இசைப்பாடல்.

முக்குணம் - மூன்று குணங்கள் (சத்துவம்-அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்; இராசசம் - போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்; தாமசம்சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்); பத்துக்குணம் - செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்.

வண்ணங்கள் ஐந்து - வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை; வண்ணம் நூறு - குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.

ஊனரசம் - குறையுடைய சுவை; நவரசம் - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை; வனப்பு- அழகு. அவை அம்மை , அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

பாடலின் பொருள்

இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே! இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக் கேட்பாயாக.

தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று (பொருந்தி நின்று) என்றுமே 'சிந்தா (கெடாத) மணியாய்' இருக்கும் உன்னை (இசைப்பாடல்களுள் ஒருவகையான) 'சிந்து' என்று (அழைப்பது நின் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்று விழும் அன்றோ?

வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.

மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

நாவின்மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.

தெரிந்து தெளிவோம்

கண்ணி - இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

இலக்கணக் குறிப்பு

  • முத்திக்கனி - உருவகம்
  • தெள்ளமுது - பண்புத்தொகை
  • குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நா - ஓரெழுத்து ஒருமொழி
  • செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை.
  • சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

கொள்வார்

கொள் + வ் + ஆர்

  • கொள் - பகுதி
  • வ் - எதிர்கால இடைநிலை
  • ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி

உணர்ந்த

உணர் + த் (ந்) + த் + அ

  • உணர் - பகுதி
  • த் - சந்தி
  • த் - ந் ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • - பெயரெச்ச விகுதி

நூல் வெளி

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது, 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை .

இயல் 1: திராவிட மொழிக்குடும்பம் - 10 ஆம் வகுப்பு தமிழ் உரைநடை | Samacheer Kalvi Guide

உரைநடை: திராவிட மொழிக்குடும்பம்

மொழி - க | உரைநடை உலகம்

உரைநடை தலைப்பு: திராவிட மொழிக்குடும்பம்

நுழையும்முன்

திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.

தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது.

மொழிகளின் தோற்றம் குறித்த விளக்கப்படம்

மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின. உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மொழிகளின் காட்சிச் சாலை

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை,

  1. இந்தோ - ஆசிய மொழிகள்
  2. திராவிட மொழிகள்
  3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  4. சீன - திபெத்திய மொழிகள்

என அழைக்கப்படுகின்றன. பல கிளை மொழிகளும் இங்குப் பேசப்படுவதால் இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ - ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர். தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா என்று வந்ததாக விளக்குகின்றார்.

மொழி ஆய்வு

திராவிட மொழிக்குடும்பம் என்னும் பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை என்ற கருத்து அறிஞர் பலரிடையே நிலவிவந்தது. இம்மொழிகளில் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் 18ஆம் நாற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர். அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார். இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்தப் பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.

கால்டுவெல்லுக்குப் பின்னர் ஸ்டென்கனோ, கே.வி. சுப்பையா, எல். வி. இராமசுவாமி, பரோ, எமினோ , கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள் திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிக்குடும்பத்திலுள்ள தமிழ், கன்னடம், மலையாளம் முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில மொழிகள் நடுத்திராவிட மொழிகள் எனவும் பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனவும் பகுக்கப்பட்டுள்ளன.

திராவிட மொழிக் குடும்பங்களின் வகைப்பாடு
பல மொழிகளிலும் உங்கள் பெயரை எழுதி மகிழுங்கள்

மேலுள்ள பட்டியலில் உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.

திராவிடமொழிகளின் பொதுப்பண்புகள்

சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், அடிச்சொல் எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

தெரியுமா?

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.

- கால்டுவெல்

சான்று

அடிச்சொல் திராவிட மொழிகள்

  • கண் - தமிழ்
  • கண்ணு - மலையாளம், கன்னடம்
  • கன்னு - தெலுங்கு, குடகு
  • ஃகன் - குரூக்
  • கெண் - பர்ஜி
  • கொண் - தோடா

திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

  • மூன்று - தமிழ்
  • மூணு - மலையாளம்
  • மூடு - தெலுங்கு
  • மூரு - கன்னடம்
  • மூஜி – துளு

குறில், நெடில் வேறுபாடு

திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.

  • அடி – குறில்
  • ஆடி – நெடில்
  • வளி - குறில்
  • வாளி – நெடில்

பால்பாகுபாடு

திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு அமைந்துள்ளது. ஆனால், வடமொழியில் இவ்வாறு அமையவில்லை. உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன. இம்மொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன. ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது. முகத்தின் பகுதிகளான வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு பால்களாகச் சுட்டப்படுகின்றன. வாய் - ஆண்பால், மூக்கு - பெண்பால், கண் - பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.

திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது. அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை. தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர். (எ.கா. கடுவன் - மந்தி; களிறு - பிடி)

வினைச்சொற்கள்

ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டு:

வந்தான் - உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமை

இவ்வியல்புக்கு மாறாக மலையாள மொழி மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு திராவிட மொழிகள் சில பொதுப்பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கென்று சில சிறப்புக் கூறுகளும் தனித்தன்மைகளும் உள்ளன.

திராவிட மொழி பண்புகள் விளக்கப்படம்

சில திராவிடமொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்

திராவிட மொழிகளின் இலக்கிய இலக்கணங்கள் அட்டவணை

தமிழின் தனித்தன்மைகள்

  1. தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழியாகும்.
  2. இலங்கை , மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
  3. ஏனைய திராவிட மொழிகளை விடவும் தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கணவளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  4. திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.
  5. தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.
  6. ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.
  7. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  8. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

தெரியுமா?

மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

தமிழ் மொழி இடம்பெற்றுள்ள வெளிநாட்டு பணத்தாள்கள்

திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந் துணையாக அமைந்துள்ளது.

தமிழ் மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது.

9th Tamil Chapter 1 Amuthendru Per | இயல் 1 அமுதென்று பேர் | Samacheer Kalvi 9th Tamil Guide

அமுதென்று பேர் பாட அறிமுகம்

கற்றல் நோக்கங்கள்

  • மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிதல்
  • வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்
  • தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்
  • தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்
  • கடிதம், கட்டுரை வாயிலாகக் கருத்துகளை வெளிப்படுத்துதல்

9th Tamil Iyal 1 Kavidhaippezhai | Tamiloviyam | 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 கவிதைப்பேழை தமிழோவியம்

கவிதைப்பேழை: தமிழோவியம்

ஈரோடு தமிழன்பன்

கவிதைப்பேழை தமிழோவியம் தலைப்பு

நுழையும்முன்

என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீதான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான்! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான்! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்!

தமிழோவியம்

தமிழோவியம் கவிதை வரிகள்

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் - உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

காலம் பிறக்கும் முன்....

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள் மட்டுமே போதுமே ஓதி, நட...

காலம் பிறக்கும் முன்....

எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே

சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச் சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே...

காலம் பிறக்கும் முன்...

விரலை மடக்கியவன் இசையில்லை - எழில் வீணையில் என்று சொல்வதுபோல்

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!

இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை, விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
  • ஏந்தி - வினையெச்சம்
  • காலமும் - முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்

வளர் - பகுதி

ப் - சந்தி

ப் - எதிர்கால இடைநிலை

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்
- பிங்கல நிகண்டு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
- பாரதியார்

தெரியுமா?

உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்: இலங்கை, சிங்கப்பூர்

Wednesday, July 30, 2025

Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Samacheer Kalvi 9th Tamil Guide

இன்றைய உலகில் இயந்திரங்களின் பங்களிப்பும், இணையத்தின் சேவைகளும் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இரண்டறக் கலந்துவிட்டன. வங்கியியல், கல்வி, பயணம், அரசுச் சேவைகள் என அனைத்தையும் எளிதாகவும் விரைவாகவும் மாற்றுவதில் இவை பெரும் பங்காற்றுகின்றன. இந்த வழிகாட்டி, இயந்திரங்கள் மற்றும் இணையவழிச் சேவைகள் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விடைகளை வழங்குகிறது.

கற்பவை கற்றபின்

1. வங்கியில் இணையவழிச் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் நடைமுறையை எழுதுக:

நாம் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் வங்கிக்கு நேரில் சென்று தான் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இணையவழி சேமிப்புக் கணக்கு இருந்தால் மற்ற பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே வங்கிப் பணிகளையும் செய்து கொள்ளலாம்.

இணையவழி சேமிப்புக் கணக்கு:

  • முதலில் நாம் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறோமோ? அந்த வங்கிக்குரிய செயலியை (APP) முதலில் நம் கணினியிலோ அல்லது அலைபேசியிலோ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • பின்னர் மின் அஞ்சல் முகவரி (E-Mail ID) ஒன்றும், கடவு வார்த்தை (Password) ஒன்றும் உருவாக்குதல் வேண்டும்.
  • பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளை, வங்கி குறியீட்டு எண் என மேற்கூறிய அனைத்தையும் குறிப்பிட்டு, இணையவழி (Net Banking) மூலம் வங்கி சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
2. உங்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற தொடர்வண்டிப் பயணத்திற்கு இணையத்தில் எவ்வாறு முன்பதிவு செய்தீர்கள்? அதன் வழிமுறைகளை அனுபவத்தில் (அ) கேட்டறிந்து வகுப்பறையில் வழங்குக.

நாங்கள் கடந்தவாரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு தொடர்வண்டியில் (வண்டி எண் 12672) இரவு 20.30 மணிக்கு முன்பதிவு செய்தோம். இரண்டாம் வகுப்பு (S – 6, 45, 46, 47, 48) தூங்கும் வசதி உள்ள பெட்டியில் இரண்டு நடுப்படுக்கை, இரண்டு கீழ்படுக்கை முன்பதிவு செய்து தானியக்கப் பண இயந்திர அட்டை மூலம் பணம் செலுத்தி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பயணச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்து சுகமான பயணம் மேற்கொண்டோம்.

இணையத்தில் தொடர்வண்டிப் பயணத்திற்கு முன்பதிவு செய்தல்:

  • பயணம் செய்ய திட்டமிடும் பொழுதே, பயணத்திற்கான சீட்டை இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில் இணையதளத்தில் பயணச் சீட்டை பதிவு செய்வது மிகவும் எளிது. நம் நேரமும், பெருமளவு மிச்சமாகும்.
  • பயணம் மேற்கொள்ள வேண்டிய ஊருக்கு உங்கள் ஊரில் இருந்து செல்லும் தொடர் வண்டிகளை அறிந்து கொண்டு, அவற்றின் நேரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பயணம் செய்ய விரும்பும் நாளில் எந்த தொடர்வண்டியில், எந்த பெட்டியில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் இருக்கும் காலியிடங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிய முனையும் போதே பயணச் சீட்டுக்கான தொகையும் அறிந்து கொள்ளலாம்.
  • பின்னர் வங்கி அட்டைகளின் உதவியுடன், பயணச் சீட்டிற்கான தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம் எனில், சற்று நேரத்தில் நமது அலைபேசிக்கு குறுஞ்செய்தியும், அச்செய்தியில் நமக்கான இருக்கை எண், புறப்படும் நேரம் போன்றவை வந்துவிடும்.
  • மின் அஞ்சலில் பயணச்சீட்டும் வந்துவிடுகிறது. நாம் பயணம் செய்யும் பொழுது, குறுஞ்செய்தியையும், நம்முடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்டி சுகமான பயணத்தை மேற்கொள்ளலாம்.

களைப்பின்றி பயணம் செய்ய இணையவழி பதிவு முறையே சிறந்ததாகும்.

3. விரலியில் (Pendrive) உள்ள பாடல்களையும், எழுத்துக் கோப்புகளையும் (Document) கணினியில் நுழைந்து உறைகளில் (Folder) இட்டுச் சேமிப்பதைச் செய்து பார்த்துத் தெரிந்து கொள்க.

‘விரலி’ என்ற வார்த்தை Pen Drive என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும்.

விரலியில் உள்ள பாடல்கள் எழுத்துக் கோப்புகளை கணினியில் சேமிக்கும் முறை:

  • முதலில் விரலியை அதன் பகுதியில் நுழைத்தல் வேண்டும்.
  • கணினித் திரையில் குறியீடு ஒன்று தோன்றும்.
  • அந்தக் குறியீட்டை இயக்கும் போது, விரலியில் உள்ள செய்திகளை எந்தப் பகுதியில் சேமிக்க வேண்டும், தனி உறை வேண்டுமா என்று திரையில் தோன்றும்.
  • கோப்புகள் உள்ள பகுதியில் சேமிக்க வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட கோப்புப் பகுதியை இயக்கி அதனுடன் சேமித்துக கொள்ளலாம்.
  • தனியாக ஒரு உறையை உருவாக்கியும் சேமித்துக் கொள்ளலாம்.
  • திரையின் முகப்புப் பகுதியில் உறையை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால் விரலி மூலம் நாம் சேமித்த செய்திகள் பாடல்கள், எழுத்துக் கோப்புகளை உடனடியாக இயக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவே விரலியில் உள்ளனவற்றை கணினியில் சேமிக்கும் முறையாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்
  • அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
  • ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
  • இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டவைகும்.
  • i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு
  • ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
  • iii) அதவறு; ஆ, இ ஆகியன சரி
  • iv) மூன்றும் சரி
விடை: ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
  • அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
  • ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  • இ) தேசியத் திறனாய்வுத் தேர்வ
  • ஈ) மூன்றும் சரி
விடை: ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

குறுவினா

1. இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்

  • தொலைநகல் இயந்திரம் (Fax)
  • தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)
  • அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machine)
  • தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)
  • இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

சிறுவினா

1. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
  • தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
  • 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
  • 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்.
  • 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு, ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
  • அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நெடுவினா

1. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

தற்காலத்தில் பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவு தங்கும் விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப் பலமுகமைகள் உள்ளன. இது பலருக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. பெரு நகரங்களில் திரைப்படங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்வதுகூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி, ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. இச்சேவைகளில் ஒன்று பயணச்சீட்டு வழங்குவதையும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையும் பயனுள்ள வகையில் செய்து வருகிறது. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம். மற்றொன்று தானியக்கப் பண இயந்திரம்.

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC – INDIAN RAILWAY CATERING AND TOURISM CORPORATION) :

மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும். பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது. வங்கி அட்டைகளின் உதவியுடன் தெகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine) :

இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது. வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது. வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
  • அ) அலெக்சாண்டர் பெயின்
  • ஆ) கிரகாம்பெல்
  • இ) செஸ்டர் கார்ல்சன்
  • ஈ) சாமுவேல் மோர்சு
விடை: இ) செஸ்டர் கார்ல்சன்
2. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………
  • அ) ஹாங்க் மாக்னஸ்கி
  • ஆ) ஈஸ்ட்மன்
  • இ) தாமஸ் ஆல்வா எடிசன்
  • ஈ) சென்கின்சு
விடை: அ) ஹாங்க் மாக்னஸ்கி
3. தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
  • அ) செஸ்டர் கார்ல்சன்
  • ஆ) ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
  • இ) ஸ்டீவ் ஜாப்ஸ்
  • ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்
விடை: ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்
4. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
  • அ) நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
  • ஆ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
  • இ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
  • ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
விடை: ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
5. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
  • அ) டிம் பெர்னெர்ஸ் லீ – வையக விரிவு வலை
  • ஆ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
  • இ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
  • ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி
விடை: ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி
6. தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?
  • அ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
  • ஆ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
  • இ) பாரிஸ் – லியான்
  • ஈ) இலண்டன் – பாரிஸ்
விடை: இ) பாரிஸ் – லியான்

நிரப்புக

1. குறுஞ்செய்தியின் வருகைக்குப் பின் தந்தி விடைபெற்றுக்கொண்டது. (சரியா, தவறா)

சரி

2. தானியக்கப் பண இயந்திரத்தை முதன்முதலில் நிறுவிய நாடு எது? எந்த ஆண்டு நிறுவியது?

இலண்டன் நகரில் (இங்கிலாந்து) 1967 ஜுன் 27ல்.

3. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

மைக்கேல் ஆல்ட்ரிச், 1979.

குறுவினா

1. ஒளிப்படி இயந்திரம் – குறிப்பு எழுதுக.
  • நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு 1938-ல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
  • சீரோகிராஃபி என்னும் உலர் எழுத்து முறை இயந்திரம் இவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இதுவே ஜெராக்ஸ் என்ற பெயரில் நிலைத்துவிட்டது.

சிறுவினா

1. தானியக்கப் பண இயந்திரம் – குறிப்புத் தருக.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
  • வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது.
  • வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.
2. இந்தியத் தொடர் வண்டி இணைய வழிப் பதிவு – விளக்குக.
  • மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும்.
  • பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது.
  • வங்கி அட்டைகளின் உதவியுடன் தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது.
  • 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.5 திருக்குறள் Thirukkural

திருவள்ளுவர்

Students can Download 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Samacheer Kalvi textbooks for competitive exams

Online education courses in Tamil

Tamil Nadu study guides

கற்பவை கற்றபின்

Question 1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க. படம் 1 படம் 2
  • அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்.
  • ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்
  • இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாந் தலை.

Answer: இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை.

Question 2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழ்ந்து ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.)

குறள்

  • அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்.
  • ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
    தகுதியான் வென்று விடல்.
  • இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

Answer: ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8 வது குறள்)

Question 3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக. பொருத்துக கேள்வி
Answer:
  • பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று
    சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
  • தத்தம் கருமமே கட்டளைக்கல்
    ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
  • அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
    அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
Question 4. தீரா இடும்பை தருவது எது?
  • அ) ஆராயாமை, ஐயப்படுதல்
  • ஆ) குணம், குற்றம்
  • இ) பெருமை, சிறுமை
  • ஈ) நாடாமை, பேணாமை

Answer: அ) ஆராயாமை, ஐயப்படுதல்

குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.

Question 5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக. சொற்கள்
Answer:
  • அ) நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்.
    முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.
  • ஆ) பேணாமை – பாதுகாக்காமை.
    அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.
  • இ) செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு.
    அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.
  • ஈ) அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.
    மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான், அமைதிக்கான விருது கிடைத்தது.

குறுவினா

Question 1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.

Question 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் – இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும். தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும். தீ தொட்டால் தான் சுடும். தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளன. அதனால் தான் ‘தீயினும் அஞ்சப்படும்’ என்றார்.

Question 3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் நம்ப வேண்டும் மன்னன், அவற்றை ஒப்புநோக்கிய பின்பே, அதனை உண்மையென நம்பவேண்டும்.

Question 4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

சொல் ஒன்று, செயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”
பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!” என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை !” என்றான். இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்துபோனது.
  • 1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
  • 2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
  • 3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.
கதைக்குப் பொருத்தமான குறள்

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

விளக்கம்:

கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன், தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை. எனவே “சொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்”.

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் – அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

கலைச்சொல் அறிவோம்

  • அகழாய்வு – Excavation
  • நடுகல் – Hero Stone
  • புடைப்புச் சிற்பம் – Embossed sculpture
  • கல்வெட்டியல் – Epigraphy
  • பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
  • பொறிப்பு – Inscription

பகுபத உறுப்பிலக்கணம்

பகுபத உறுப்பிலக்கணம்

பகுபத உறுப்பிலக்கணம் - பிறந்தது, வளர்ப்பாய்

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View

இலக்கணக் குறிப்பு

எத்தனை எத்தனை – அடுக்குத் தொடர்

இலக்கணக் குறிப்பு

எத்தனை எத்தனை – அடுக்குத் தொடர்
ஏந்தி – வினையெச்சம்
நிகரிலாக் காப்பியம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விட்டு விட்டு – அடுக்குத் தொடர்
காலமும் – முற்றும்மை

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View

Featured Post

Complete Guide to HSC Class 12 English Writing Skills (Sets 7-10) with Solutions

📥 Download Complete Guide PDF Complete Guide to HSC Class 12 English Writing Skills (Question Sets 7-10) Target Audience: Cl...

Popular Posts