Mullaipaattu 5 Mark Question Explained | Sangam Literature

Mullaipaattu 5 Mark Question Explained | Sangam Literature

5 மதிப்பெண் வினா, முல்லைப்பாட்டு

முல்லைப் பாட்டில் உள்ள கார்கால செய்திகளை விவரித்து எழுதுக.

முல்லைப்பாட்டு

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போல பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங் கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர் நின் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்.

சொல்பொருள்

நேமியொடு - சக்கரத்துடன்
வலம்புரி - வலமாக சுழிகளை உடைய சங்கினை
பொறித்த - வைத்திருப்பவர் திருமால்
மா - திருமகளை
தாங்கு - மார்பிலே தாங்கியவர்
தடக்கை - பெரிய கைகளை உடையவர்
நீர் செல - மாவலி மன்னன் நீரை வார்க்க
நிமிர்ந்த - விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்ற
மாஅல் போல - திருமால் போன்ற மேகம் (செய்யுளிசை அளபெடை)
பாடு - ஒலி
இமிழ் - ஒலிக்கின்ற
பனிக்கடல் - குளிர்ந்த கடல் நீரை
பருகி - குடித்தது
வலன் - வலிமையாக
ஏர்பு - எழுந்தது
கோடு - மலைமீது
கொண்டு - மோதி
எழுந்த - எழுந்து
கொடுஞ் செலவு - விரைந்து செல்லும்
எழிலி - மேகம்
நனம் - அகன்ற
தலை - இடத்தை உடைய
உலகம் - உலகத்தை
வளைஇ - வளைத்தது (சொல்லிசை அளபெடை)
சிறு - சிறுபொழுது ஆகிய
புன் - துன்பத்தைத் தருகின்ற
மாலை - மாலைப் பொழுதில்
பெரும் - பெரிய
பெயல் - மழை
பொழிந்த - பெய்தது
பெருமுது பெண்டிர் - மிகவும் வயது முதிர்ந்த பெண்கள்
அருங் கடி - கடும் காவலையுடைய
மூதூர் - பழமையான ஊரின்
மருங்கில் - பக்கத்தில்
போகி - சென்றனர்
யாழ் இசை - யாழின் இசை போல்
இன வண்டு - வண்டினங்கள்
ஆர்ப்ப - ஆரவாரம் செய்தன
நாழி - படி
கொண்ட - நிறைய
நெல்லொடு - நெல்லுடன்
நறுவீ முல்லை - நறுமணம் கொண்ட முல்லை
அலரி - மலர்களை
(அரும்பு - மொட்டுகள் அவிழ் - மலர்ந்த)
தூஉய் - தூவினர்
கைதொழுது - கைகளால் தொழுதனர்
விரிச்சி - நற்சொல் கேட்டு
நிற்ப - நின்றனர்
நடுங்கு - நடுங்கிய
சுவல் - தோள்களை
அசைத்த - கட்டிய
கையள் - கைகளை உடைய
ஆய்மகள் - இடையர் குலப் பெண்
சிறு - சிறிய
தாம்பு - கயிற்றினால்
தொடுத்த - கட்டப்பட்ட
பசலைக் - இளமையான
கன்றின் - கன்று
உறுதுயர் - அடைந்த துன்பத்தை
அலமரல் - நினைத்துப்
நோக்கி - பார்த்தாள்
கைய - கையில்
கொடுங்கோல் - வளைந்த கத்தியை உடைய கம்பை ஏந்திய
கோவலர் - இடையர்
பின் நின்று - பின்னே நின்று
உய்த்தர - செலுத்த
இன்னே - இப்பொழுதே
நின் தாயர் - உன்னுடைய தாய்ப்பசு
வருகுவர் - வந்துவிடும்
என்போள் - என்று கூறினாள்
நன்னர் - நன்மை தரும்
நன்மொழி - நற் சொல்லை
கேட்டனம் - கேட்டோம்.

[முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; 103 அடிகளை உடையது; ஆசிரியப்பாவால் ஆனது; பத்துப்பாட்டில் மிக குறைந்த அடிகளையுடைய நூல். இதனை இயற்றியவர் காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். முல்லைப்பாட்டு முல்லை நிலத்தைப் பற்றியது. முல்லையின் பெரும்பொழுது கார்காலம்; சிறுபொழுது மாலை ஆகும்.]

5 மதிப்பெண் வினாவுக்கான விடை

முல்லைப்பாட்டு - கார்காலச் செய்திகள்

திருமாலின் தோற்றம்

சக்கரத்துடன் வலஞ்சுழிச் சங்கினை ஏந்தியிருப்பவர்; திருமகளை மார்பிலே தாங்கியவர்; பெரிய கைகளை உடையவர்; மாவலி மன்னன் நீரை வார்க்க விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றவர்.

மாலை நேரப்பெருமழை

அத்தகைய திருமால் போன்ற மேகம் ஒலி ஒலிக்கின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்தது; வலிமையாக எழுந்தது; மலை மீது மோதியது; விரைந்து சென்று அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்தது; துன்பத்தைத் தருகின்ற சிறு பொழுதாகிய மாலைப்பொழுதில் பெரிய மழை பெய்தது.

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

பெரிதும் வயது முதிர்ந்த பெண்கள் கடும் காவலை உடைய பழமையான ஊரின் பக்கத்தில் சென்றனர். வண்டினங்கள் யாழின் இசை போல் ஆரவாரம் செய்தன. நெல்லுடன் படி நிறைய முல்லை மலர்களைத் தெய்வத்தின் முன் தூவினர். கைகளால் தொழுதனர். நற்சொல் கேட்டு நின்றனர்.

ஆயர் குல மகளின் நற்சொல் கேட்டல்

அங்கு, நடுங்குகின்ற தோள்களைக் கட்டியபடி இடையர் குலப் பெண் ஒருத்தி இருந்தாள். சிறிய கயிற்றினால் கட்டப்பட்ட இளம் கன்று அடைகின்ற துன்பத்தை நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது,"வளைந்த கத்தியை உடைய கம்பைக்கொண்ட எம் இடையர் பின்னே நின்று செலுத்த, உன் தாயர் இப்பொழுதே வந்துவிடுவர்"என்றாள். இதைக்கேட்ட முதுபெண்டிர் "நன்மை தரும் நற்சொல்லைக் கேட்டோம்" என்றனர்.

பாடப்புத்தக விளக்கம்:

கார்காலச் செய்திகள்

பெரு மழைப்பொழிவு

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்து தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்று உள்ளது மழை மேகம். மேகம் ஒலிக்கும் கடலின் குளிர் நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

விரிச்சி கேட்டல்

துன்பத்தை செய்கின்ற மாலைப்பொழுதில் முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கின்றன. நறுமணம் கொண்ட அரும்புகள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

அங்கு சிறு தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர் தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து உன் தாயர் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்து விடுவர், வருந்தாதே" என்றாள். இது நல்ல சொல் எனக் கொண்டு தலைவியிடம், நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முது பெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

தலைவியை ஆற்றுப்படுத்துதல்

தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர்.