How to Write a Book Review (Katturai) in Tamil: Manimekalai Example

How to Write a Book Review (Katturai) in Tamil: Manimekalai Example

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

மதிப்புரை

நூலின் தலைப்பு

மணிமேகலை

நூலின் மையப் பொருள்

மணிமேகலை மேற்கொண்ட துறவு

மொழிநடை

நாவல்

வெளிப்படுத்தும் கருத்து

     நாம் போன பிறவியில் செய்த பாவத்தின் பயனாகத்தான் இந்த உடம்பு வாய்த்திருக்கிறது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு நல்லது செய்வதும் கெட்டது செய்வதும் முழுக்க முழுக்க நம்முடைய கையில் தான் இருக்கிறது. இந்த உடம்பு அழகானது என்று நினைத்தால் அந்த கருத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அழகு நிலை இல்லாதது. இளமை போய் முதுமை வந்து விட்டால் அத்தனை அழகும் மறைந்து போகும். இந்த நிலை இல்லாத உடம்பைப் பராமரிக்கத் தான் எத்தனை அலங்காரங்கள்? அழகு சாதனங்கள், நறுமணப் பூச்சுகள். இதை எல்லாம் நீக்கி விட்டால் இந்த உடம்பு எத்தனை கேவலமான நாற்றம் கொண்டது என்று புரியும். புற்றுக்குள் பாம்பு புகுந்தது போல கோபம், வருத்தம், கவலை, துன்பம் எல்லாம் உள்ளே பூட்டி வைக்கிறோம்.

நூலின் நயம்

தீவதிலகையின் கூற்று:

     இந்த உலகத்தையே பெரும் துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு மிகப்பெரிய நோய் பசி. அந்தப் பசியைப் போக்கும் அற்புத மருந்து அந்த அமுதசுரபி. நீ அதை ஏற்றுக்கொண்டு, இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்து மகிழச் செய்ய வேண்டும். உன் மூலம் இந்த பூமி மொத்தமும் நலம் பெறவேண்டும்.

அறவண அடிகளின் கூற்று:

     இங்கிருந்து சூரிய மண்டலம் தொலைவில் உள்ளது என்பதை நாம் உணர முடியும். ஆனால், அதைக் கண்ணால் பார்த்து அறிவது சாத்தியமில்லை. அதுபோலத்தான், நல்ல அறநெறிகளை நாம் நேரில் பார்த்தால் தான் நம்புவோம் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. மற்றவர்கள் உணர்த்துவதை உள்ளத்தால் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிரையின் கணவன் சாதுவன் கூற்று:

     கள் நம்முடைய அறிவை மயக்குகிறது. மாமிசம், மற்ற உயிர்களைக் கொன்று பிழைக்கச் சொல்கிறது. பல பெண்களின் பின்னே அலைவதும் மிருகக் குணம் தான்.

நூலின் கட்டமைப்பு

     மணிமேகலைக் காப்பியத்தை, இவள் பெயர் மணிமேகலைமுதல் குற்றம்தவிர்த்த வாழ்க்கை ஈறாக 66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.

சிறப்புக் கூறு

     மூல நூலான மணிமேகலையை விட, நாவல் வடிவிலமைந்த இந்த நூல் எளிய நடையில் கதை சொல்கிறது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

     நாடகக் காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, மணிமேகலை வாழ்ந்த உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

     புத்தர் அறிவித்த நன்னெறிகள், நூல் முழுவதும் தொடர்கின்றன. இக்கால சமுதாயம் சீர்பெற மிகவும் அவசியமான நூலாகும்.

     மிகுந்த சுவையோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

நூலின் ஆசிரியர்: என். சொக்கன்