3rd Social Science : Term 1 Unit 4 : Safety
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : பாதுகாப்பு
- விபத்துகளை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளல்
- தீயிலிருந்து பாதுகாக்கும் முறைப்பற்றி அறிந்து கொள்ளல்
- சாலைப்பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ளல்
- நீர் பாதுகாப்பு பற்றி புரிந்து கொள்ளல்
- மின்சாரப் பாதுகாப்பு பற்றி புரிந்து கொள்ளல்
நமது வாழ்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் அன்றாட வாழ்க்கையில் வீடு, பள்ளி, சாலை மற்றும் இதர இடங்களில் விபத்துகள் நடைபெறக்கூடும். நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றினால் பாதுகாப்பாக வாழலாம்.
- அவசரம்
- விதிகளை மீறுதல்
- கவனக்குறைவு
- முறையான பயிற்சி இன்மை
- விழிப்புணர்வு இன்மை
- பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாது இருத்தல்
- வெறுப்பு
நம் வாழ்க்கையில் விபத்துகள் தீ, நீர், வாகனங்கள், மின்சாரம், விஷப்பூச்சிகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கண்ணாடி பொருள்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படலாம்.
தீ என்பது மனிதனின் அற்புத படைப்பு
- நெருப்பினால் பொருள்களை உருவாக்கவும், அழிக்கவும் முடியும்.
- நெருப்பு நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. நாம் அதை கவனமாக கையாளவேண்டும்.
தீ விபத்திற்கான காரணங்கள்
கீழ்க்காணும் வழிகளில் தீ விபத்து நேரலாம்:
- வெடிப்பொருள்கள்
- குறைந்த மின்னழுத்தம்
- எரிவாயு கசிவு
- எளிதில் தீப்பிடிக்க கூடியப் பொருள்கள்
காட்டுத் தீ எவ்வாறு உருவாகிறது?
- மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதால்.
- மனிதர்கள் தீ போன்ற பொருள்களை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் செல்வதால்.
தீ விபத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களைக் கவனமாக கையாளவேண்டும்.
- சமையல் செய்பவர் பருத்தி ஆடைகளை அணியவேண்டும்.
- சமையல் முடித்தப்பின் எரிவாயு உருளை அடைப்பானை மூடிவிடவேண்டும்.
- நெருப்புடன் விளையாடக்கூடாது.
- நாம் வெடி வெடிக்கும் பொழுதும் பெரியவர்களுடன் சேர்ந்து கவனமாக வெடிக்கவேண்டும்.
சிந்தனை செய்
கேள்வி: தீ அணைப்பானை நீ எங்கேயாவது கண்டதுண்டா?
பதில்: ஆம். எங்கள் பள்ளியில் தீ அணைப்பான்கள் உள்ளன.
தீ விபத்தின் பொழுது என்ன செய்யவேண்டும்?
- தீ அணைப்பானைப் பயன்படுத்தவேண்டும்.
- கட்டடத்தில் உள்ள எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யவேண்டும்.
- புகை பரவும்பொழுது மூக்கு மற்றும் வாயை ஈரத்துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
- எவர் உடம்பிலாவது தீப்பற்றினால் சணல் பைகளைக் கொண்டு தீயை அணைக்கவேண்டும். தீக்காயம் அடைந்தவரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உனது உடையில் தீப்பற்றினால்:
- ஓடக்கூடாது.
- கீழே படுத்துப் புரளவேண்டும்.
- ஓடினால் எளிதில் தீ பரவும்.
நாம் அறிந்து கொள்வோம்
தீ விபத்து நடந்தால் ‘101' என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
நீ என்ன செய்யக்கூடாது?
உன் தோலில் தீக்காயம் இருந்தால்,
- மை அல்லது காபி தூளை தீக்காயத்தில் வைக்கக் கூடாது.
- தீப் புண்ணை ஊசிக்கொண்டு குத்தக்கூடாது. அவ்வாறு குத்தினால் அது பாதிப்பை உண்டாக்கும்.
செயல்பாடு - நாம் எழுதுவோம்
தீ நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு உதவுகிறது?
- சமையலுக்கு தீ பயன்படுகிறது.
- சாலைகள் அமைக்கப் பயன்படும் தார் பொருளை உருக்கிடப்பயன்படுகிறது.
- தங்கம் போன்ற ஆபரணங்களைச் செய்ய (உருக்கப்) பயன்படுகிறது.
- தேவையற்ற பொருள்களை எரிப்பதற்குப் பயன்படுகிறது.
- மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றைப் பயன்படுத்த தீ பயன்படுகிறது.
- விளக்கு எரிக்க தீ பயன்படுகிறது.
'நீர் நமது வாழ்வின் அமுதம் ஆகும்'
நம் வாழ்வில் நீர் மிகவும் முக்கியமானது. ஏரி, ஆறு, நீர் வீழ்ச்சி, கடல் மற்றும் குளம் போன்றவற்றில் நாம் விதிமுறைகளை மீறி குளித்தால் விபத்துகள் நேரும்.
சிந்தனை செய்
கேள்வி: ஆறு அல்லது ஏரியில் நீ குளித்திருக்கிறாயா? ஆம் என்றால் யாருடன் சென்று குளித்தாய்?
பதில்: ஆம். நான் ஆற்றில் என் தந்தையுடன் குளித்திருக்கிறேன்.
நாம் அறிந்து கொள்வோம்
குளம் அல்லது ஆற்றில் குளிப்பதற்கு நாம் பெரியவர்களுடன் செல்லவேண்டும். நீச்சல் தெரிந்தால் மட்டுமே அங்கு குளிக்கவேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- தனியாக நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக்கூடாது.
- தேங்கியுள்ள குளத்தில் இறங்கக்கூடாது.
- நீர்நிலைகளில் உள்ள அபாய இடத்திற்கு செல்லக்கூடாது.
- கிணற்றை எட்டிப்பார்க்கக் கூடாது. கிணறு ஆழமாக இருக்கக்கூடும்.
- நீரில் பயணம் செய்யும் பொழுது பாதுகாப்பு கவசத்தை அணியவேண்டும்.
மின்சாரம் நமது வாழ்வின் முக்கிய தேவையாகி விட்டது. மின்சாரம் இன்றி எந்தப் பொருளும் இயங்காது என்ற நிலைக்கு காலம் நம்மை மாற்றிவிட்டது. வீடுகள், தொழிற்சாலைகள், மற்றும் இதர இடங்களில் மின்சாரம் பயன்படுகிறது. கவனக்குறைவாக கையாண்டால் மின்விபத்து ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- மின்பொத்தான்களையும், மின்கம்பிகளையும் ஈரமான கையால் தொடக்கூடாது.
- சலவைப்பெட்டி மற்றும் இதர மின்சாதனங்களை மின் இணைப்பில் இருக்கும் பொழுது தொடக்கூடாது.
- மின்மாற்றி மற்றும் மின்கோபுரங்கள் அருகில் விளையாடக்கூடாது.
- மின்கம்பத்தின் மேலே ஏறக்கூடாது.
- மின்பொத்தான் பெட்டியில் குச்சி போன்ற பொருள்களை நுழைக்கக்கூடாது.
- மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் விளையாடக் கூடாது.
செயல்பாடு - நாம் எழுதுவோம்
உனது வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களைப் பட்டியலிடுக:
- மின் விளக்கு
- துணி மடிப்பான்
- மின் விசிறி
- குளிரூட்டி (A/C)
- குளிர்சாதனப்பெட்டி
- மின்சார அடுப்பு
- துணி துவைக்கும் இயந்திரம்
நாம் அறிந்து கொள்வோம்
குறைந்த மின்னழுத்தத்தால் விபத்து நேரும் பொழுது தண்ணீர்க் கொண்டு தீயை அணைக்கக்கூடாது.
சாலையில் நாம் கவனமாக நடக்கவேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கவனக்குறைவினால் அதிக விபத்துகள் நேரிடுகிறது.
சாலை விளக்கு (Traffic signal)
தலைக்கவசம் அணியவும், விபத்தை தவிர்க்கவும்
- விபத்துகளைத் தவிர்க்க
- சாலை விதிகளைப் பின்பற்றவும்.
- சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
- சாலையில் வேகமாக செல்லக்கூடாது.
- காரில் (மகிழுந்து) பயணம் செய்யும் போது இருக்கைப் பட்டையை அணியவேண்டும்.
- இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணியவேண்டும்.
தலைக்கவசம் அணிவோம். உயிரைக் காப்போம்
சாலையில் செல்லும்பொழுது
- நடைபாதையில் நடக்கவேண்டும்.
- சாலையில் விளையாடக்கூடாது.
- சாலை விளக்கில் இருந்து வரும் வண்ணத்தை நாம் கவனித்து சாலையைக் கடக்க வேண்டும்.
பாதசாரிகளுக்கான சாலைக்குறியீடுகள் (Traffic Signs)
சிவப்பு : நில்
பச்சை : செல்
சிந்தனை செய்
1. நீ இச்சாலை குறியீடுகளைக் கவனித்திருக்கிறாயா?
பதில்: ஆம்
2. நீ எங்குப் பார்த்திருக்கிறாய்?
பதில்: என்னுடைய பள்ளியின் அருகில்.
நாம் அறிந்து கொள்வோம்
சாலை விளக்கு இல்லாத இடத்தில் நாம் முதலில் வலப்பக்கம் திரும்பி, பிறகு இடப்பக்கம் திரும்பி பிறகு வலப்பக்கம் பார்க்க வேண்டும்.
பாதசாரிகள் கடக்கும் இடம்
- பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டுமே பாதசாரிகள் கடக்கவேண்டும்.
- பாதசாரிகள் கடக்கும் இடம் வரிக்குதிரைப்போன்று கருப்பு மற்றும் வெள்ளைக்கோடுகளுடன் காணப்படும்.
நாம் விதிகளைப் பின்பற்றுவோம்!
செயல்பாடு - நாம் எழுதுவோம்
விழிப்புணர்வு குறித்த வாசகங்களை எழுதுக.
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.
- விதிகளைப் பின்பற்றுவோம், விதி நம்மைக் காக்கும்.
- தலைக் கவசம் உயிர் கவசம்.
- நில், கவனி, செல்.
போக்குவரத்துப் பூங்கா
சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் போக்குவரத்துப் - பூங்கா உள்ளது.
போக்குவரத்துப் பூங்காவில் சாலைவிதிகளை நாம் கற்றுக்கொள்ளலாம். இப்பூங்கா சாலையைப் பற்றிய விழிப்புணர்வை நமக்கு அளிக்கும்.
சிந்தனை செய்
கேள்வி: இதுபோன்று போக்குவரத்துப் பூங்கா உன் வீட்டருகில் உள்ளதா?
பதில்: இல்லை. ஆனால் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்திருக்கின்றேன்.
நமது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளை, பூச்சிகளைக் கொல்ல பயன்படுத்துகிறோம். அந்த மருந்துகள் மிகவும் அபாயகரமானது. அவற்றை நாம் தொடக்கூடாது.
விஷப்பூச்சிகளால் உண்டாகும் அபாயங்கள் - அறிகுறிகள்:
- தோலில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
- வீக்கத்தை ஏற்படுத்தும் (கண் இமை, காது, வாய் போன்ற இடங்களில் வீக்கத்தை உருவாக்கும்).
- தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- புதருக்கு அருகே செல்லக்கூடாது.
- வீடு மற்றும் சுற்றுபுறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் அறிந்து கொள்வோம்
வயலில் வேலை செய்பவர்கள் நல்லெண்ணெய், பாரபின் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு வேலை செய்வார்கள். அதனால் பூச்சிகள் அவர்களை கடிக்காது.
- கூர்மையான ஆயுதம் மற்றும் கண்ணாடிப்பொருள்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.
- ஏனெனில் அது காயங்களை ஏற்படுத்தும்.
- நமது உயிர் விலை மதிப்பற்றது. நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்றால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும்.
- நாம் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.