6th Tamil - 2nd Mid Term Exam 2024 - Original Question Paper | Theni District

6th Standard Tamil Second Mid-Term Exam 2024 - Original Question Paper with Answer Key

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2024

ஆறாம் வகுப்பு தமிழ் | விடைகளுடன்

6th Standard Tamil Second Mid-Term Exam Question Paper 2024 6th Standard Tamil Second Mid-Term Exam Question Paper 2024 6th Standard Tamil Second Mid-Term Exam Question Paper 2024
தேர்வு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2024
வகுப்பு ஆறாம் வகுப்பு
பாடம் தமிழ்
மதிப்பெண்கள் 50
நேரம் 1.30 மணி

பகுதி - I (மதிப்பெண்கள்: 12)

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5x1=5)

  • 1. நாம் ________ சொல்படி நடக்க வேண்டும்.
    அ) இளையோர் ஆ)ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கர்
    விடை: இ) மூத்தோர்
  • 2. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
    அ) மாச + அற ஆ) மாசு + அற இ) மாச + உற ஈ) மாசு + உற
    விடை: ஆ) மாசு + அற
  • 3. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________.
    அ) காட்டாறு ஆ) காடாறு இ) காட்டு ஆறு ஈ) காடு ஆறு
    விடை: அ) காட்டாறு
  • 4. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ________ ஆகும்.
    அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை
    விடை: ஈ) பொறை
  • 5. கதிர் முற்றியதும் ________ செய்வர்.
    அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல்
    விடை: அ) அறுவடை

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக. (4x1=4)

  • 6. காமராசரைக் "கல்விக் கண் திறந்தவர்" என மனமாரப் பாராட்டியவர் ________.
    விடை: தந்தை பெரியார்
  • 7. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ________.
    விடை: மறைந்த
  • 8. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் ________ கட்டுவர்.
    விடை: மாவிலை தோரணம்
  • 9. ஆசாரக்கோவையின் ஆசிரியர் ________.
    விடை: பெருவாயின் முள்ளியார்

இ) பொருத்துக. (3x1=3)

  • 10. நெறி - வழி
  • 11. மன்னற்கு - மன்னனுக்கு
  • 12. பண் - இசை

பகுதி - II (மதிப்பெண்கள்: 10)

எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி. (5x2=10)

  • 13. நாம் எதை நம்பி வாழக் கூடாது?
    நாம் பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
  • 14. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
    பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் போன்றவை காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டன.
  • 15. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
    மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால், கற்றவருக்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு என மூதுரை கூறுகிறது.
  • 16. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
    நற்பண்புகள் உடையவரோடு நாம் நட்புக் கொள்ள வேண்டும்.
  • 17. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
    வீட்டிற்கு வந்த விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.
  • 18. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
    ஆண்டு முழுவதும் உழவுத் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உழவர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகின்றனர்.
  • 19. ண, ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

    ண: நாவின் நுனி, மேல்வாயின் நடுப்பகுதியைத் தொடுவதால் ‘ண’கரம் பிறக்கிறது.

    ன: நாவின் நுனி, மேல்வாயின் முன்பகுதியைத் தொடுவதால் ‘ன’கரம் பிறக்கிறது.

    ந: நாவின் நுனி, மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் ‘ந’கரம் பிறக்கிறது.

பகுதி - III (மதிப்பெண்கள்: 8)

எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி. (2x4=8)

  • 20. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
    ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் (நல்லொழுக்க விதைகள்):
    1. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.
    2. பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.
    3. இனிய சொற்களைப் பேசுதல்.
    4. எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
    5. கல்வி அறிவு பெறுதல்.
    6. அனைவரையும் சமமாகப் பேணுதல்.
    7. அறிவுடையவராய் இருத்தல்.
    8. நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ளுதல்.
  • 21. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

    காணும் பொங்கல் அன்று உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

    குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களான பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.

    இவ்விழாவின்போது பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெறும். பெரியோரிடம் ஆசி பெறுவர்.

  • 23. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
    • காமராசர் முதலமைச்சராக இருந்தபோது, மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறந்தார்.
    • அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.
    • ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வர மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
    • பள்ளிகளில் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தினார்.
    • பொறியியல், மருத்துவ, கால்நடை மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி உயர் கல்விக்கு வித்திட்டார்.
    • அதனால்தான் அவர் "கல்விக் கண் திறந்தவர்" என்று போற்றப்படுகிறார்.

பகுதி - IV (மதிப்பெண்கள்: 10)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி. (5x2=10)

  • 24. தொடரில் அமைத்து எழுதுக:

    அ) மனமாற்றம்: திருடனின் வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம் அவனை நல்ல மனிதனாக்கியது.

    ஆ) பொங்கல்: தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

  • 25. மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக:

    அ) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
    திருத்தம்: தேர் திருவிழாவிற்குச் சென்றனர்.

    ஆ) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது.
    திருத்தம்: வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

  • 26. கலைச் சொல் அறிவோம்:

    அ) Makeup - ஒப்பனை

    ஆ) Library - நூலகம்

  • 27. பொருத்தமான சொல்லை இட்டு எழுதுக:

    அ) பூ மணம் வீசும். (மனம், மணம்)

    ஆ) வண்டி இழுப்பது காளை. (காளை, காலை)

  • 28. பொருள் தருக:

    அ) பார் - உலகம்

    ஆ) மேதைகள் - அறிஞர்கள்

பகுதி - V (மதிப்பெண்கள்: 4)

அடி மாறாமல் எழுதுக. (1x4=4)

  • 29. ‘மன்னனும்’ - எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக.

    "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
    தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
    சென்றஇடம் எல்லாம் சிறப்பு."

    - ஔவையார்

பகுதி - VI (மதிப்பெண்கள்: 6)

கட்டுரை வடிவில் எழுதுக. (1x6=6)

  • 30. அ) பொங்கல் திருவிழா (அல்லது) ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்

    அ) பொங்கல் திருவிழா

    முன்னுரை:
    'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது பழமொழி. தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் முதன்மையான விழா பொங்கல் திருவிழா. இது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

    போகிப் பண்டிகை:
    பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதற்கேற்ப, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, வீட்டைச் சுத்தம் செய்து விழாவுக்குத் தயாராவர்.

    தைப்பொங்கல்:
    தை முதல் நாள், வீட்டின் முற்றத்தில் புதுப்பானையில் புத்தரிசியிட்டு, வெல்லம், முந்திரி சேர்த்துப் பொங்கலிடுவர். இயற்கையையும், வாழ்வளிக்கும் சூரியனையும் வணங்கி, கரும்பு, மஞ்சள் கொத்து வைத்துப் படையலிட்டு மகிழ்வர்.

    மாட்டுப் பொங்கல்:
    தை இரண்டாம் நாள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் ஊட்டி விடுவர். அன்று மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறும்.

    காணும் பொங்கல்:
    தை மூன்றாம் நாள் உற்றார் உறவினரைக் கண்டு மகிழ்வர். பெரியோரிடம் ஆசி பெறுவர். குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பர். இதுவே காணும் பொங்கல்.

    முடிவுரை:
    பொங்கல் விழா, உழவுக்கும், உழைப்புக்கும், உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு உன்னதப் பண்பாட்டு விழாவாகும். நாம் அனைவரும் இவ்விழாவைப் போற்றிக் காப்பது நமது கடமையாகும்.