OMTEX AD 2

10th Tamil Quarterly Exam 2024 Question Paper & Answer Key | Samacheer Kalvi Guide

10th Tamil Quarterly Exam 2024 Question Paper & Answer Key | Samacheer Kalvi Guide

காலாண்டுப் பொதுத் தேர்வு-2024

தேர்வு விவரங்கள்

  • மொழிப்பாடம்: தமிழ் (பகுதி-1)
  • வகுப்பு: பத்தாம் வகுப்பு
  • கால அளவு: 3.00 மணி
  • பெரும மதிப்பெண்கள்: 100

குறிப்பு: விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

வினாத்தாள்

பகுதி-1 (மதிப்பெண்கள்: 15x1=15)

சரியான விடையைக் குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்.

1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

  • அ) எந் + தமிழ் + நா
  • ஆ) எந்த + தமிழ் + நா
  • இ) எம் +தமிழ்+நா
  • ஈ) எந்தம் +தமிழ்+நா

2) முல்லைப்பாட்டு ---பாவகையால் பாடப்பட்டது.

  • அ) ஆசிரியப்பா
  • ஆ) வெண்பா
  • இ) வஞ்சிப்பா
  • ஈ) கலிப்பா

3) வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை -

  • அ) குலை வகை
  • ஆ) மணி வகை
  • இ) கொழுந்து வகை
  • ஈ) இலை வகை

4) 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

  • அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  • ஆ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  • இ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  • ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

5) எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

  • அ) கூவிளம் தேமா மலர்
  • ஆ) கூவிளம் புளிமா நாள்
  • இ) தேமா புளிமா காசு
  • ஈ) புளிமா தேமா பிறப்பு

6) பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

  • அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
  • ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
  • இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
  • ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

7) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ---

  • அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  • ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  • இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  • ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

8) ”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப்போக்கர் கேட்டது --- வினா. “அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது --- விடை.

  • அ) ஐயவினா, வினா எதிர் வினாதல்
  • ஆ) அறிவினா, மறை விடை
  • இ) அறியா வினா, சுட்டு விடை
  • ஈ) கொளல் வினா, இனமொழி விடை

9) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

  • அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  • ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
  • இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  • ஈ) அங்கு வறுமை இல்லாததால்

10) காலம் கரந்த பெயரெச்சம் என்பது ---

  • அ) பண்புத்தொகை
  • ஆ) வினைத்தொகை
  • இ) உவமைத்தொகை
  • ஈ) வேற்றுமைத்தொகை

11) பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

  • அ) வானத்தையும் பாட்டையும்
  • ஆ) வானத்தையும் புகழையும்
  • இ) வானத்தையும் பூமியையும்
  • ஈ) வானத்தையும் பேரொலியையும்

பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

12) இச்செய்யுளை இயற்றியவர்-----

  • அ) செய்குதம்பிப் பாவலர்
  • ஆ) கம்பர்
  • இ) சந்தக்கவிமணி
  • ஈ) குமரகுருபரர்

13) ‘மதி' என்ற சொல்லின் பொருள்------

  • அ) மறதி
  • ஆ) உயிர்
  • இ) அறிவு
  • ஈ) அருள்

14) அருந்துணை -இலக்கணக்குறிப்பு தருக.

  • அ) பண்புத்தொகை
  • ஆ) வினைத்தொகை
  • இ) உவமைத்தொகை
  • ஈ) பண்புப்பெயர்

15) இச்செய்யுள் அடிகள் இடம்பெற்ற நூல் -----

  • அ) காசிக்காண்டம்
  • ஆ) நீதிவெண்பா
  • இ) தனிப்பாடல்
  • ஈ) பரிபாடல்

பகுதி II (மதிப்பெண்கள்: 4x2=8 + 5x2=10)

பிரிவு-1

குறிப்பு: எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும். வினா எண் 21க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

16. 'எட்டு' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

17. விடைகளுக்கு ஏற்ற வினாத் தொடர் அமைக்க.
அ) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் பெப்பர்.
ஆ) வளி, தென்றல், புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களால் காற்று அழைக்கப்படுகிறது.

18. வசன கவிதை - குறிப்பு வரைக.

19. 'உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'
அ) கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?
ஆ) எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

20. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

21. ‘விடல்...’ என முடியும் குறளை எழுதுக. (கட்டாய வினா)

பிரிவு-2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்.

22. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. (அ) இன்சொல் ஆ) கீரிபாம்பு)

23. அகராதியில் காண்க. (அ) தால் ஆ) உழுவை)

24. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25. கலைச்சொற்கள் தருக: அ) Discussion ஆ) Infrared rays

26. இரு சொற்களையும் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. (அ) கொடு – கோடு ஆ) மடு – மாடு)

27. பழமொழிகளை நிறைவு செய்க. (அ) விருந்தும் ---------- ஆ) அளவுக்கு ----------)

28. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
ஆ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

பகுதி-III (மதிப்பெண்கள்: 2X3=6 + 2X3=6 + 2X3=6)

பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடை அளிக்கவும்.

29. சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாக பல ஊழி காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஆகிய உள்ளீடு தோன்றியது.

அ) பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
இ) பெய்தமழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’ - இது போல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

பிரிவு-2

குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும். வினா எண் 34 க்கு கட்டாயமாக விடை அளிக்க வேண்டும்.

32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

33. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

34. அடிபிறழாமல் எழுதுக. (கட்டாய வினா)
அ) 'வாளால் அறுத்து...' எனத் தொடங்கும் குலசேகர ஆழ்வாரின் பாடலை எழுதுக. (அல்லது)
ஆ) ‘சிறுதாம்பு...’ எனத்தொடங்கும் நப்பூதனாரின் பாடலை எழுதுக.

பிரிவு-3

குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடை அளிக்கவும்.

35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த்தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். - இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

36. உவமையணியைச் சான்றுடன் விளக்குக.

37. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு. - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி-IV (மதிப்பெண்கள்: 5X5=25)

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கவும்.

38. அ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக. (அல்லது)
ஆ) தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.

39. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது)
ஆ) உமது கிராமத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பழுதுபட்ட சாலைகளை மாற்றித்தருமாறும் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதியும் உரிய அலுவலருக்குக் கூட்டு விண்ணப்பம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

ஒருவர் ஒற்றைச் சக்கர வண்டியில் அமர்ந்து அலைபேசி பேசிக்கொண்டு செல்கிறார்

41. மதுரை மாவட்டம் 1/23, அன்னை நகர், மேலூர் கிராமத்தில் குடியிருக்கும் கவிமணியின் மகள் மலர்விழி என்பவர் ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை மலர்விழியாகக் கருதி, கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

42. அ) மொழிபெயர்க்க:

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

(அல்லது)

ஆ) உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வுத் தொடர்களையும் அகர வரிசைப்படுத்தி எழுதுக.

பகுதி-V (மதிப்பெண்கள்: 3X8=24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை அளிக்கவும்.

43. அ) இறைவன், புலவர் இடைக்காடனின் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. (அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

44. அ) ‘புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன? (அல்லது)
ஆ) சா.கந்தசாமியின் 'பாய்ச்சல்” என்னும் சிறுகதையை அழகு என்ற சிறுவன் கூறுவதைப் போல் சுவைபட எழுதுக.

45. அ) ‘சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. (அல்லது)
ஆ) 'விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

உத்தேச விடைக்குறிப்புகள்

பகுதி-I

வினா எண் விடை மதிப்பெண்
1இ) எம் + தமிழ் + நா1
2அ) ஆசிரியப்பா1
3ஆ) மணி வகை1
4அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது1
5ஈ) கூவிளம் தேமா மலர்1
6இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு1
7இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்1
8இ) அறியா வினா, சுட்டு விடை1
9ஈ) அங்கு வறுமை இல்லாததால்1
10ஆ) வினைத்தொகை1
11ஈ) வானத்தையும் பேரொலியையும்1
12அ) செய்குதம்பிப் பாவலர்1
13இ) அறிவு1
14அ) பண்புத்தொகை1
15ஆ) நீதிவெண்பா1

பகுதி-II

பிரிவு-1

16. 'எட்டு':
பொதுமொழி: எட்டு - எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும்.
தொடர்மொழி: எள் + து - எள்ளை உண் என்னும் பொருளைத் தருகிறது.

17. வினாக்கள்:
அ) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் என்ன?
ஆ) காற்று எவ்வாறு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது?

18. வசன கவிதை:
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

19. கும்பகர்ணன்:
அ) கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.
ஆ) எமனுக்குத் தூதுவரான வில்லைப்பிடித்த இராமன் கையில் உறங்கப் போ என்றனர்.

20. செய்குதம்பிப் பாவலரின் கல்வி:
அருளைப் பெருக்கு! அறிவைத் திருத்து! மருளை அகற்றி கல்வியைப் போற்று!

21. திருக்குறள் (கட்டாய வினா):
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். - திருவள்ளுவர்

பிரிவு-2

22. தொகைநிலைத் தொடர்:
அ) இன்சொல் - பண்புத்தொகை (இன்சொல் பேசி விருந்தினரை வரவேற்க வேண்டும்.)
ஆ) கீரிபாம்பு - உம்மைத்தொகை (கீரியும் பாம்பும் போல சண்டையிடக் கூடாது.)

23. அகராதி:
அ) தால் - நாக்கு, தாலாட்டு
ஆ) உழுவை - புலி, மீன் வகை

24. பகுபத உறுப்பிலக்கணம் (மயங்கிய):
மயங்கிய = மயங்கு + இ(ன்) + ய் + அ
மயங்கு – பகுதி
இன் – இறந்த கால இடைநிலை, புணர்ந்து 'ன்' கெட்டது
ய் – உடம்படுமெய்
– பெயரெச்ச விகுதி

25. கலைச்சொற்கள்:
அ) Discussion - கலந்துரையாடல்
ஆ) Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

26. தொடர் அமைத்தல்:
அ) கொடு - கோடு: கொடுப்பதற்கு எல்லைக்கோடு கிடையாது.
ஆ) மடு - மாடு: மடுவில் மாடுகள் குளித்தன.

27. பழமொழிகள்:
அ) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
ஆ) அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு.

28. எழுவாய் செழுமை செய்தல்:
அ) குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
ஆ) நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

பகுதி-III

பிரிவு-1

29. உரையாடல் (சோலைக்காற்று - மின்விசிறிக்காற்று):
சோலைக்காற்று: நான் வாழும் இடம் சோலைகளும் வனங்களும். நீ?
மின்விசிறிக் காற்று: நான் வாழும் இடம் வீடுகளும் அலுவலகங்களும்.
சோலைக்காற்று: மாலை நேரங்களில் என்னைத் தேடி மக்கள் வருவர்.
மின்விசிறிக் காற்று: வீட்டுக்குள்ளே இருப்பவர்களுக்குக் குளிர்ந்தக் காற்றை நான் தருவேன்.
சோலைக்காற்று: மின்சாரம் இல்லை எனில் நீ இல்லை. நான் இயற்கையானவன்.
மின்விசிறிக் காற்று: ஆம். எனக்கு விலை உண்டு. நீ விலை மதிப்பற்றவன். நீயே சிறந்தவன்.

பிரிவு-2

32. வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடல்:
திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். தொந்தியுடன் கூடிய சிறு வயிறும் ஆடட்டும். பொட்டுடன் கூடிய நெற்றிச்சுட்டியும் பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும், காதின் குழைகளும் அசைந்தாடட்டும். கொண்டையும் அதனைச் சுற்றியுள்ள முத்துகளும் சேர்ந்தாடட்டும். பழமையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானே, பவளம் போன்ற அழகிய மேனியும் ஆடும்படி செங்கீரை ஆடுவாயாக.

பிரிவு-3

35. தொகைநிலைத் தொடர்கள்:

சொற்றொடர்தொடர்வகைவிளக்கம்
மல்லிகைப் பூஇருபெயரொட்டுப் பண்புத்தொகைமல்லிகை (சிறப்புப் பெயர்), பூ (பொதுப்பெயர்)
ஆடுமாடுகள்உம்மைத்தொகைஆடுகளும் மாடுகளும்
குடிநீர்வினைத்தொகைகுடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் என முக்காலத்திற்கும் பொருந்தும்.
சுவர்க்கடிகாரம்ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைசுவரின் கண் மாட்டப்படும் கடிகாரம்
தண்ணீர்த் தொட்டிஇரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைதண்ணீரை உடைய தொட்டி
மணி பார்த்தான்இரண்டாம் வேற்றுமைத் தொகைமணியைப் பார்த்தான்

37. அலகிட்டு வாய்பாடு:

சீர்அசைவாய்பாடு
கருவியும்நிரை நிரைகருவிளம்
காலமும்நேர் நிரைகூவிளம்
செய்கையும்நேர் நேர் நேர்தேமாங்காய்
செய்யும்நேர் நேர்தேமா
அருவினையும்நிரை நிரை நேர்கருவிளங்காய்
மாண்டநேர் நேர்தேமா
தமைச்சுநிரைபுபிறப்பு

இக்குறட்பா பிறப்பு என்னும் வாய்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது.

பகுதி-IV

38. அ) தமிழையும் கடலையும் இரட்டுற மொழிதல்:

தமிழ்கடல்
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் கொண்டது.முத்தினை அமிழ்ந்து எடுக்கின்றனர்.
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம் வளர்த்தது.மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
ஐம்பெருங்காப்பியங்களை மெத்த அணிகலன்களாகப் பெற்றது.மிகுதியான வணிகக் கப்பல்கள் (வணிகலன்) செல்லும்படி உள்ளது.
சங்கப் பலகையிலிருந்து சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.தன் அலைகளால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

38. ஆ) தமிழ் மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகள்:

  1. மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து, அரசு விழாக்களில் பாட வழிவகுத்தார்.
  2. 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி, தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

39. அ) உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்:

தரமற்ற உணவு குறித்துப் புகார் கடிதம்

அனுப்புநர்
(உங்கள் பெயர்),
(உங்கள் முகவரி),
(ஊர்).

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவுப் பாதுகாப்பு ஆணையரகம்,
(மாவட்டத்தின் பெயர்).

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
வணக்கம். நான் கடந்த வாரம் (தேதி) அன்று (ஊரின் பெயர்)-இல் உள்ள '(விடுதியின் பெயர்)' என்ற உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாகவும், சுகாதாரமின்றியும் இருந்தது. மேலும், உணவின் விலையும் மிக அதிகமாக இருந்தது. இது குறித்து அங்கிருந்த ব্যবস্থাপாளரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
எனவே, தாங்கள் உடனடியாக அந்த உணவு விடுதியில் ஆய்வு செய்து, பொதுமக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன், அன்று நான் செலுத்திய கட்டண இரசீது நகலை இணைத்துள்ளேன்.

நன்றி.

இடம்: (உங்கள் ஊர்)
நாள்: (தேதி)

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(உங்கள் கையொப்பம்).

உறைமேல் முகவரி:
பெறுநர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
(மாவட்டத்தின் பெயர்).

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:

ஒற்றைச் சக்கரத்தில் ஒரு பயணம்!
உயிர் மேல் இல்லை ஒரு கவனம்!
செல்பேசி வழியே சிதறும் சிந்தனை!
தடுமாறி விழுந்தால் தீரா வேதனை!
அலைபேசி அழைப்பைச் சற்று நிறுத்து!
அருகில் வரும் ஆபத்தை உணர்ந்து திருத்து!

42. அ) மொழிபெயர்க்க:

தங்கக் கதிரவன் காலையில் விழித்தெழுந்து, தன் ஒளிக்கதிர்களால் இருளை அகற்றத் தொடங்குகிறது. வெண்மேகங்கள் அலைந்து திரிகின்றன. வண்ணப் பறவைகள் தாளக்கட்டுடன் தங்கள் காலைப் கீதங்களை இசைக்கின்றன. அழகிய வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் நறுமணம் மென்காற்றை நிரப்புகிறது. அக்காற்று எங்கும் மென்மையாக வீசி, எல்லாவற்றையும் இனிமையாக்குகிறது.

பகுதி-V

43. அ) இறைவன், புலவர் இடைக்காடனின் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வு:

முன்னுரை:
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் இறைவன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அவற்றுள் ஒன்று, தன் அடியவரான இடைக்காடனார் பொருட்டு இறைவன் வழக்காடிய நிகழ்வாகும்.

புலவரின் வருத்தம்:
பாண்டிய நாட்டை ஆண்டுவந்த குசேலபாண்டியன் என்னும் மன்னனின் அவையில், கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் கவிதை பாடினார். மன்னன் அவரது கவிதையைப் பொருட்படுத்தாமல் அவமதித்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் சென்று, "மன்னன் என்னை அவமதித்தது, சொல்லின் வடிவமான உமையம்மையையும், பொருளின் வடிவமான உன்னையும் அவமதித்தது போலாகும்" என்று முறையிட்டார்.

இறைவனின் திருவிளையாடல்:
தன் அடியவரின் வருத்தத்தைக் கேட்ட இறைவன், அவருக்கு ஒரு திருவிளையாடலைப் புரிய எண்ணினார். அவர், மதுரை கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, நேர் வடக்கே வைகை ஆற்றின் தென்கரையில் ஒரு கோவிலை உண்டாக்கி அங்கு சென்று தங்கினார்.

மன்னனின் தவிப்பு:
காலையில் கோவிலுக்குச் சென்ற மன்னன், இறைவன் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். "இறைவா, நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? என் ஆட்சியில் அறநெறி தவறியதா?" என்று புலம்பி வருந்தினான். அப்போது, "மன்னா, நீ இடைக்காடனார் எனும் புலவரை அவமதித்தாய். புலவர்களைப் பேணுவதே அரசின் கடமை. அந்தப் பிழையை நீ உணரும்வரை இங்கு வரமாட்டேன்" என்றொரு அசரீரி ஒலித்தது.

தவறை உணர்ந்து திருந்துதல்:
தன் தவற்றை உணர்ந்த மன்னன், உடனடியாக இடைக்காடனாரைத் தேடிச் சென்று, அவரிடம் தன் பிழையை மன்னிக்குமாறு வேண்டினான். புலவருக்குப் பொன்னும் பொருளும் தந்து சிறப்பு செய்தான். புலவர் மனம் மகிழ்ந்தார். அதன் பிறகு மன்னன், புலவருடன் இறைவனிடம் சென்று வேண்ட, இறைவனும் மீண்டும் கடம்பவனக் கோவிலுக்குத் திரும்பினார்.

முடிவுரை:
இறைவன் தன் அடியவர்களின் துயரைத் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பதையும், அறிவையும் புலமையையும் அவமதிப்பது இறைவனையே அவமதிப்பதற்குச் சமம் என்பதையும் இந்நிகழ்வு உணர்த்துகிறது.

45. அ) ‘சான்றோர் வளர்த்த தமிழ்' கட்டுரை:

முன்னுரை:

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை காலந்தோறும் பல சான்றோர்கள் தங்கள் அறிவாலும், ஆற்றலாலும், படைப்புகளாலும் வளர்த்தெடுத்துள்ளனர். அவர்கள் வளர்த்த தமிழ் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

சங்க காலம்:

மூன்று சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களுக்கு உண்டு. தொல்காப்பியர், 'தொல்காப்பியம்' என்ற இலக்கண நூலைத் தந்து தமிழின் கட்டமைப்பை வரையறுத்தார். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற எண்ணற்ற சங்கப் புலவர்கள் தங்கள் அக, புறப் பாடல்களால் தமிழின் இலக்கிய வளத்தைச் செம்மைப்படுத்தினர்.

காப்பியங்களும் அறநூல்களும்:

இளங்கோவடிகள் ‘சிலப்பதிகாரம்’ மூலமும், சீத்தலைச் சாத்தனார் ‘மணிமேகலை’ மூலமும் காப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டனர். கம்பர் 'கம்பராமாயணம்' படைத்து கவிச்சக்கரவர்த்தி ஆனார். திருவள்ளுவர் 'திருக்குறள்' தந்து உலகப் பொதுமறையால் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

பக்தி இலக்கிய காலம்:

நாயன்மார்கள் தேவார, திருவாசகப் பாடல்களாலும், ஆழ்வார்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தாலும் பக்தித் தமிழைப் பரப்பினர். எளிய சொற்களில் இறைவனைப் பாடி, இசையோடு தமிழை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர்.

தற்காலம்:

பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிக் கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வையும், தமிழ் உணர்வையும் ஊட்டினர். உ.வே. சாமிநாதைய்யர் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்து, அழிந்து கொண்டிருந்த பல தமிழ் நூல்களை அச்சேற்றி ‘தமிழ்த்தாத்தா’ ஆனார். ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற அயல்நாட்டினரும் தமிழின் சிறப்பை உணர்ந்து இலக்கண, இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

முடிவுரை:

இவ்வாறு, காலந்தோறும் பல சான்றோர்களின் அயராத உழைப்பால் தமிழ்மொழி தழைத்தோங்கியுள்ளது. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்" என்ற சச்சிதானந்தன் கூற்றுக்கிணங்க, நாமும் சான்றோர் வளர்த்த தமிழைப் போற்றி, வளர்ப்பது நமது கடமையாகும்.