4th Standard Tamil Term 1 Chapter 5 Panpadhtum Palamoligal - Lesson and Explanation

பண்படுத்தும் பழமொழிகள் - 4th Tamil Term 1 Chapter 5

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : பண்படுத்தும் பழமொழிகள்

பண்படுத்தும் பழமொழிகள்

5. பண்படுத்தும் பழமொழிகள்
4th Tamil Lesson Introduction
அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான்.
Dogs barking scene

தாத்தா : அமுதவாணா, என்ன தேடுகிறாய்?

அமுதவாணன் : "நாயைக் கண்டால் கல்லைக் காணோம்" என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா.

தாத்தா : அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா! கல்லால் செதுக்கிய சிலை தானே கோவில்களில் இருக்கிறது ! அந்தச் சிலைகளைக் கல்லாகப் பார்த்தால், இறைவன் என்ற நாயகன் தெரியமாட்டார். சிலையை நாயகனாகப் பார்த்தால், கல் தெரியாது. இதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.

அமுதவாணன் : தாத்தா, "குரைக்கின்ற நாய் கடிக்காது" என்று என் நண்பன் இன்பவாணன் நேற்று கூறினான். குரைக்கின்ற நாய் கடிக்காதா தாத்தா?

தாத்தா : அப்படி இல்லை அமுதவாணா குரைக்கின்ற நாய் என்பது தவறு. குழைகின்ற நாய் கடிக்காது என்பதே சரியானது. குழைகின்ற என்றால் நம்மோடு பழகிய நாய் நம்மைப் பார்த்து வாலை ஆட்டிக் குழைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துமே அதுதான்.

Dialogue context image
இருவரும் சந்தைக்குள் நுழைந்தனர். நுழைவாயிலில் யானை ஒன்று ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அமுதவாணனுக்கும் ஆசை வந்தது.

அமுதவாணன் : தாத்தா, நானும் இந்த யானையிடம் ஆசி பெற்றுக் கொள்கிறேன். தாத்தா

தாத்தா : பெற்றுக்கொள், இதோ பத்து ரூபாய். யானையிடம் கொடு

Elephant blessing

அமுதவாணன் : தாத்தா, அன்றொரு நாள் அம்மா, அப்பாவிடம் கூறினார்களே, "யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்று, அதற்குப் பொருள் என்ன தாத்தா?

தாத்தா : யானை கிடையாது அது ஆனை அதைப் பிரித்து எழுதினால் ஆ + நெய் அதாவது பசுவின் நெய். பூனை கிடையாது. அது பூநெய் அதைப் பிரித்து எழுதினால் பூ + நெய் அதாவது பூவில் ஊறும் தேன். நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம் வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்.

இளமையில் ஆநெய், முதுமையில் பூ நெய். இதைத்தான் "ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்பர். ஆனால் இன்று இதன் பொருள் மாறுபட்டு வழங்கப்படுகிறது.

இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்கினர். அமுதவாணன் தாத்தா, எனக்கு விளையாட பந்தும், மட்டையும் வாங்கித் தாருங்கள், அப்படியே பாப்பாவுக்குப் பலூன்கள் வாங்கிக் கொள்ளலாம்.

தாத்தா : வாங்கலாம் அமுதவாணா!

அமுதவாணன் : எனக்கும் சேர்த்து பலூன்கள் நிறைய வாங்கலாம் தாத்தா.

Shopping scene

தாத்தா : போதும், ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

அமுதவாணன் : ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமா?

தாத்தா : சொல்கிறேன்! சொல்கிறேன்! ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்று இப்பொழுது பயன்படுத்துகிறோம் ஆனால் இது தவறு. அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சரி. அதாவது புரியாமல் எதையும் மனனம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்த பிறகுதான் நினைவில் கொள்ள வேண்டும்.

(பேசிக்கொண்டே இருவரும் வீட்டை அடைந்தனர்)

படிக்கும் பகுதியில் இடம்பெறும் பழமொழிகளை அறிதல்

அமுதவாணன் : உங்களுடன் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சி தாத்தா.

Tags: Term 1 Chapter 5 | 4th Tamil பருவம் 1 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ்.

4th Tamil : Term 1 Chapter 5 : Panpadhtum palamoligal : Panpadhtum palamoligal Term 1 Chapter 5 | 4th Tamil in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : பண்படுத்தும் பழமொழிகள் : பண்படுத்தும் பழமொழிகள் - பருவம் 1 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.