6th Tamil - 2nd Mid Term Exam 2024 - Original Question Paper | Chennai District

6th Standard Tamil 2nd Mid Term Exam Official Original Question Paper with Answer Key 2024

6th வகுப்பு தமிழ் - இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2024 | வினாத்தாள் மற்றும் விடைகள்

6th Standard Tamil 2nd Mid Term Exam Question Paper 2024 6th Standard Tamil 2nd Mid Term Exam Question Paper 2024 6th Standard Tamil 2nd Mid Term Exam Question Paper 2024

தேர்வு விவரங்கள்

வகுப்பு : 6
தேர்வு : இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2024
பாடம் : தமிழ்
நேரம் : 1.30 மணி
மொத்த மதிப்பெண்கள் : 30

பகுதி - I : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5x1=5)

1. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______.

  • (அ) மானம்இல்லா
  • (ஆ) மானமில்லா
  • (இ) மானமல்லா
  • (ஈ) மானம்மில்லா

2. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

  • (அ) மஞ்சள்
  • (ஆ) வந்தான்
  • (இ) கண்ணில்
  • (ஈ) தம்பி

3. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  • (அ) பொறுமை + உடைமை
  • (ஆ) பொறை + யுடைமை
  • (இ) பொறு + யுடைமை
  • (ஈ) பொறை + உடைமை

4. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ______.

  • (அ) வாழையிலை
  • (ஆ) வாழைஇலை
  • (இ) வாழைலை
  • (ஈ) வாழிலை

5. கதிர் முற்றியதும் ______ செய்வர்.

  • (அ) அறுவடை
  • (ஆ) உரமிடுதல்
  • (இ) நடவு
  • (ஈ) களையெடுத்தல்

பகுதி - II : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க: (4x2=8)

6. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

7. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

8. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

9. இன எழுத்துகள் என்றால் என்ன?

10. “கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

11. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

பகுதி - III : அடிபிறழாமல் எழுதுக. (1x3=3)

12. 'மன்னனும் மாசறக்' எனத் தொடங்கும் மூதுரை பாடலை எழுதுக.

பகுதி - IV : ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2x3=6)

13. காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக.

14. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

15. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

பகுதி - V : ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்கவும். (1x5=5)

16. அ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

(அல்லது)

ஆ) காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
(முன்னுரை - இளமைக் காலம் - கல்விப் பணி - நிறைவேற்றிய பிற திட்டங்கள் - முடிவுரை)

பகுதி - VI : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (3x1=3)

17. கலைச்சொல் தருக.
Higher Secondary School

18. தொடரை நீட்டித்துப் புதிய தொடரை உருவாக்குக.
பாடம் படித்தான்.

19. முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை


விடைகள் (Answer Key)

பகுதி - I : சரியான விடைகள்

1. மானம் + இல்லா - (ஆ) மானமில்லா

2. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் - (இ) கண்ணில்

3. பொறையுடைமை - (ஈ) பொறை + உடைமை

4. வாழை + இலை - (அ) வாழையிலை

5. கதிர் முற்றியதும் - (அ) அறுவடை

பகுதி - II : விடையளி

6. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

மன்னனையும் குற்றமில்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனை விட கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவருக்கோ, சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு.

7. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளும் பொறையுடைமைப் பண்புடன் நாம் வாழ்ந்தால் வாழ்வில் பெருமை பெறலாம்.

8. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டன.

9. இன எழுத்துகள் என்றால் என்ன?

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். (எ.கா: வல்லினத்திற்கு மெல்லினம் இன எழுத்து).

10. “கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

ந்தவனம் - ற்றமிழ்
பாட்டிசைத்து - பால்
வாழை - ட்டிலிட்டு
மூன்று - முக்கனியோடு

11. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

போகிப்பண்டிகை ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி, வீட்டைத் தூய்மை செய்வதற்காக இது கொண்டாடப்படுகிறது.

பகுதி - III : அடிபிறழாமல் எழுதுக

12. 'மன்னனும் மாசறக்' எனத் தொடங்கும் மூதுரை பாடல்:

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

- ஔவையார்

பகுதி - IV : விடையளி

13. காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக.

காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.

  • மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
  • அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை சட்டமாக்கினார்.
  • பள்ளிக்கு வர இயலாத ஏழைக் குழந்தைகள் பசியாற மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகச் சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார்.

14. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

ஆசாரக்கோவை கூறும் எட்டு நல்லொழுக்க விதைகள்:

  1. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.
  2. பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.
  3. இனிய சொற்களைப் பேசுதல்.
  4. எந்த உயிருக்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
  5. கல்வி அறிவைப் பெறுதல்.
  6. அனைவரிடமும் நட்புடன் பழகுதல்.
  7. அறிவுடையவராக இருத்தல்.
  8. நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ளுதல்.

15. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

பொங்கல் திருநாளின் நான்காம் நாளான காணும் பொங்கலன்று, மக்கள் தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு பேசி மகிழ்வர். குடும்பத்தினருடன் சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பர். மேலும், பல இடங்களில் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடத்தப்படும்.

பகுதி - V : விரிவான விடையளி

16. அ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

அண்ணா நூற்றாண்டு நூலகம்:

  • சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகும்.
  • இது தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் எட்டு அடுக்குகளைக் கொண்டது.
  • இதன் தரைத்தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரெய்லி நூல்கள் மற்றும் ஒலி வடிவ நூல்கள் உள்ளன.
  • முதல் தளத்தில் குழந்தைகளுக்கெனத் தனியாக ஒரு பிரிவு உள்ளது. இங்கு 20,000க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு தளத்திலும் பொருளாதாரம், சட்டம், கணினி அறிவியல், தத்துவம், வரலாறு, அரசுத் தேர்வு நூல்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த நூல்கள் உள்ளன.
  • ஏழாம் தளத்தில் பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • இது வெறும் நூலகம் மட்டுமல்ல, ஒரு முழுமையான அறிவு மையம்.

ஆ) காமராசர் (கட்டுரை)

முன்னுரை:
‘கல்விக் கண் திறந்தவர்’ என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர். ‘படிக்காத மேதை’, ‘கர்மவீரர்’ எனப் போற்றப்பட்ட அவருடைய வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைக் காலம்:
காமராசர் விருதுநகரில் குமாரசாமி – சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத குடும்பச் சூழலால், தனது இளமைப் பருவத்திலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல நேர்ந்தது.

கல்விப் பணி:
முதலமைச்சராகப் பதவியேற்றதும், கல்வி வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்ந்து செயல்பட்டார். மூடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். ஏழை மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைக் களைய சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் திறந்து கல்விப் புரட்சி செய்தார்.

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
கல்விப் பணி மட்டுமின்றி, விவசாயிகளின் நலன் காக்க பல அணைகளைக் கட்டினார். தொழில் வளர்ச்சிக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பெரம்பூர் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை போன்ற பல தொழிற்சாலைகளைத் தமிழகத்தில் நிறுவினார்.

முடிவுரை:
காமராசரின் தன்னலமற்ற தொண்டு அவரை மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்கச் செய்துள்ளது. அவர் காட்டிய வழியில் நாமும் பயணித்து, கல்வி கற்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்போம்.

பகுதி - VI : மொழித்திறன்

17. கலைச்சொல் தருக.

Higher Secondary School - மேல்நிலைப் பள்ளி

18. தொடரை நீட்டித்துப் புதிய தொடரை உருவாக்குக.

பாடம் படித்தான்.
அவன் பாடம் படித்தான்.
அவன் தமிழ் பாடம் படித்தான்.
அவன் நேற்று தமிழ் பாடம் படித்தான்.

19. முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்துக.

ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
விடை: கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.