Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 2.2 பட்டமரம்
Students can download the 9th Tamil Chapter 2.2 "பட்டமரம்" Questions and Answers, Summary, and Notes. The Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you revise the complete Tamil Nadu State Board New Syllabus, complete homework assignments, and score high marks in board exams.
கற்பவை கற்றபின்
1. விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசுக.
ஏழை விவசாயி: எங்க அப்பா காலத்திலிருந்து நெல், கரும்பு போட்டோம். அப்போது விளைச்சல் வந்தது. இப்போது வெண்டை, புடலை கூட வரமாட்டேங்குது.
அழகு (மனை விற்பனையாளர்): என்ன போட்டு என்ன ஆச்சு? மழை இல்லை என்றால் என்ன பண்ண முடியும்?
ஏழை விவசாயி: அழகு... பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்லை, கிணற்றிலும் தண்ணியில்லை!
அழகு: நான் சொல்ற வழிக்கு வரமாட்டேங்கிற... விற்று பணத்தை வங்கியில் போட்டுவிட்டு நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு.
ஏழை விவசாயி: பூமித்தாயை விற்கச் சொல்கிறாயா... விற்றால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகிறீர்கள். என்ன ஆகப் போகுதென்று எனக்குத் தெரியவில்லை!
அழகு: மழையில்லை, தண்ணீரில்லை. வீடு கட்டி நூறு ஜனங்கள் பிழைக்கட்டுமே! வயல் வரப்பை வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க? விற்றால் மகளுக்குக் கல்யாணம் செய்யலாம், மகனைப் படிக்க வைக்கலாம். எல்லாம் உன் நன்மைக்கே சொல்கிறேன்.
ஏழை விவசாயி: பால் தரும் பசுமாட்டின் மடியை அறுத்துப் பால் குடிப்பதா? விளை நிலத்தைப் பூரா விலை நிலமாக ஆக்கிட்டீங்க அழகு.
அழகு: இனி வரப்போகும் நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?
ஏழை விவசாயி: உங்களைப் போன்ற ஆட்களால்தான் கொசுத் தொந்தரவு அதிகமாகிவிட்டது. குளம், குட்டையையெல்லாம் பிரிச்சுப் போட்டு விற்றாயிற்று. தவளை இருந்தாலாவது கொசுவைப் பிடிக்கும், இப்போது அதற்கும் வழியில்லை.
அழகு: எதுவும் வேண்டாம், உங்கள் பிள்ளைகள் இந்தக் குடிசையில் இருப்பார்களா? கேட்டுச் சொல்லுங்கள்.
ஏழை விவசாயி: உனக்குப் பணம் முக்கியம், எனக்குப் பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுபவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுபவன் பணக்காரனாகிறான்.
2. பட்டமரம், புதிதாக முளைவிட்ட குருத்து ஆகிய இரண்டும் பேசிக்கொள்வதாய்க் கற்பனை உரையாடல் நிகழ்த்துக.
(மாணவர்கள் இந்த கேள்விக்கு தாங்களாகவே கற்பனையான உரையாடலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.)
3. பட்டணத்துப் பறவைகளும் ஊர்ப் பறவைகளும் என்ற தலைப்பில் பறவைகள் கூறுவன போலச் சிறு சிறு கவிதைகள் படைக்க.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ) கீழே
ஆ) மேலே
இ) இசை
ஈ) வசை
விடை: அ) கீழே
சிறுவினா
1. பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?
கவிஞர் தமிழ் ஒளியின் கருத்துப்படி பட்டமரத்தின் வருத்தங்கள்:
- தினந்தோறும் மொட்டைக் கிளையோடு நின்று பெருமூச்சு விடுவது.
- தன்னை வெட்டும் நாள் ஒன்று வரும் என்று எண்ணித் துன்பப்படுவது.
- ஒரு காலத்தில் நிழல் தந்து, வாசனை மலர்களையும், இலைகளையும் கூரையாக விரித்திருந்ததை நினைப்பது.
- வெப்பத்தால் கருகி, வாடி நிறம் மாறியதை எண்ணிக் குமைவது.
- ‘மரம்’ என்ற பெயர் மாறி, ‘கட்டை’ என்ற பெயர் பெற்றதைக் குறித்துக் கொடுந்துயர் கொள்வது.
- உடையான பட்டை கிழிந்து, தன் அழகு முழுவதையும் இழந்ததை எண்ணி வருந்துவது.
- காலப் புயலை எதிர்க்க முடியாமல் கலங்கும் மனிதனைப் போல, ஓலமிட்டுக் கரம் நீட்டித் துன்பத்தில் உழல்வது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ‘விசனம்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
அ) வேதனை
ஆ) மகிழ்ச்சி
இ) ஏக்கம்
ஈ) கவலை
விடை: ஈ) கவலை
2. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) மிசை – மேல்
ஆ) கந்தம் – மணம்
இ) வெம்பல் – வாடல்
ஈ) குந்த – வருந்த
விடை: ஈ) குந்த – வருந்த (சரியான பொருள்: குந்த – உட்கார)
நிரப்புக
3. கவிஞர் தமிழ் ஒளி வாழ்ந்த காலம் 1924 – 1965.
4. ‘பட்டமரம்’ கவிதை இடம் பெற்ற நூல் தமிழ் ஒளியின் கவிதைகள்.
5. பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் கவிஞர் தமிழ்ஒளி.
குறுவினா
1. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை?
நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலியன கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் ஆகும்.
பாடலின் பொருள்
இலைகள், துளிர்கள் எதுவும் இன்றி வறண்ட மொட்டைக் கிளைகளோடு நின்று, தினம் தினம் தன் நிலையை எண்ணிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு ஏக்கத்துடன் திகழும் பட்ட மரமே! உன்னையும் ஒருவன் வெட்டும் நாள் விரைவில் வரும் என்று எண்ணி மனக்குமுறல் அடைந்தாயோ?
அமர்வதற்கு நிழல் தந்து, வாசனை பொருந்திய மலர்களை மலரச் செய்து, இலைகளால் கூரை விரித்திருந்த மரமே! வெப்பத்தால் வெந்து, கருகி இந்த நிறம் வந்ததே என்று வருந்துகிறாயோ?
‘மரம்’ என்னும் பெயர் மாறி, ‘கட்டை’ என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் கொண்டனையோ! உன் மரப்பட்டை என்னும் உடல் வெப்பமுற்று, கிழிந்துவிட, அழகை முற்றும் இழந்த நிலை அடைந்தாயோ!
காலம் என்னும் புயல் சீறிவர, கலங்கும் மனிதன் உதவி கேட்டு, ஓலமிட்டுக் கரம் நீட்டித் தவிப்பது போல நீயும் துன்பத்தில் உழல்கிறாயோ!
பாடும் பறவைகள் உன்னில் கூடி வாழ்ந்து, உனக்கு ஒரு பாடல் புனைந்ததும், மூடுபனித்திரை உனக்கு மோகம் கொடுத்ததும், ஆடும் கிளைகளில் சிறுவர்கள் ஏறிநின்று குதிரை ஓட்டி விளையாடியதும், இன்று ஏட்டில் எழுதிய ஒரு பெருங்கதையைப் போல முடிந்துவிட்டதே! அவையாவும் வெறுங்கனவாக ஆனதே என்று, பட்ட மரம் ஒன்று தன் நிலையை எண்ணிக் குமைவதாகக் கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் எழுதியுள்ளார்.
மொழித்திறன் பயிற்சிகள்
சொல்லும் பொருளும்
- விசனம் – துன்பம், கவலை
- குந்த – உட்கார
- கந்தம் – வாசனை
- இற்று – அழிந்து (இத்துப் போச்சு என்பது கொச்சை வழக்கு)
- எழில் – அழகு
- மிசை – மேல்
- ஓலம் – அலறல்
இலக்கணக் குறிப்பு
- வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்
- மூடுபனி – வினைத்தொகை
- ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்
- வெறுங்கனவு – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. விரித்த – விரி + த் + த் + அ
விரி – பகுதி; த் – சந்தி; த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி.
2. குமைந்தனை – குமை + த்(ந்) + த் + அன் + ஐ
குமை – பகுதி; த்(ந்) – சந்தி (த் ‘ந்’ ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; அன் – சாரியை; ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
3. அடைந்தனை – அடை + த்(ந்) + த் + அன் + ஐ
அடை – பகுதி; த்(ந்) – சந்தி (த்’ந்’ ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; அன் – சாரியை; ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
4. கருகினை – கருகு + இன் + ஐ
கருகு – பகுதி; இன் – இறந்தகால இடைநிலை; ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
5. இழந்தனை – இழ + த்(ந்) + த் + அன் + ஐ
இழ – பகுதி; த்(ந்) – சந்தி (த்’ந்’ ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; அன் – சாரியை; ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
6. உழன்றனை – உழல் + ன் + ற் + அன் + ஐ
உழல் – பகுதி; ன் - ல்’ன்’ ஆனது விகாரம்; ற் – இறந்தகால இடைநிலை; அன் – சாரியை; ஐ – முன்னிலை ஒருமை.
7. புனைந்தது – புனை + த்(ந்) + த் + அ + து
புனை – பகுதி; த்(ந்) – சந்தி (த்’ந்’ ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; அ – சாரியை; து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
8. கொடுத்தது – கொடு + த் + த் + அ + து
கொடு – பகுதி; த் – சந்தி; த் – இறந்தகால இடைநிலை; அ – சாரியை; து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.